வேலை நேரத்தில் அரசு ஊழியர்கள் இருக்கையில் இல்லாதிருந்தால், அவர்கள் இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் உத்திரப்பிரதேச மாநில பொதுப்பணித்துறை அமைச்சரான சிவபால் யாதவ், மதிய உணவுக்காக அரசு ஊழியர்கள் யாரும் தங்களது இல்லங்களுக்கு செல்லக்கூடாது என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பணியிலிருக்கும்போது திடீரென காணாமல் போனாலோ, மதிய உணவு இடைவேளைக்காக நீண்ட நேரம் எடுத்துக் கொண்டாலோ பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அம்மாநில முல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
எந்த அரசு ஊழியராவது பணி நேரத்தில் தனது இருக்கையில் இல்லாதிருந்தால் எனக்கு தகவல் கொடுங்கள். நான் அவர்களை பணி இடை நீக்கம் செய்கிறேன் என அவர் கூறினார். மேலும் இந்த விவகாரத்தில் ஊடகத் துறையினரின் ஒத்துழைப்பையும் அவர் கோரியுள்ளார்.
|