காற்று சீசன் முடிந்ததால் தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி கடுமையாக சரிந்துள்ளது.
தமிழகத்தில் அன்றாட மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு உள்ளது. பல்வேறு மின் உற்பத்தி மூலமும் தனியாரிடம் மின் கொள்முதல் மூலமும் மின்தேவை சமாளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் காற்றாலைகளில் ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் அதிக மின்சாரம் கிடைக்கிறது.
அதிகபட்சமாக 5 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு கூட சில நாட்களில் காற்றாலை மின்சாரம் கிடைக்கிறது. தற்போது இந்த மின் உற்பத்தியும் கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காற்றாலை மின்உற்பத்தி சரிவடைந்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் காற்றின் வேகம் குறைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக காற்றாலைகள் சுழல்வது நின்றுவிட்டது. பல்வேறு நிலைகளில் காற்றாலைகளில் சுழற்சி அதிகப்பட்சமாக 292 மெகாவாட் அளவிலும் குறைந்தபட்டசமாக பூஜ்யம் என்ற அளவிலும் இருந்தது.
இதனால் காற்றாலை மின்உற்பத்தி 82 மெகாவாட் என்ற அளவிலேயே இருந்தது. தற்போது மழை சீசன் என்பதால் ஏசி மற்றும் மின்விசிறி பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் காற்றாலை மற்றும் அணு மின்உற்பத்தி குறைந்த நிலையிலும் மின்தட்டுப்பாடு ஓரளவு சமாளிக்கப்படுகிறது.
|