மகாராஷ்டிராவில் பெண் கைதிகள் மற்றும் திறந்தவெளி சிறைகளில் உள்ள கைதிகள் இனிமேல் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு வீடியோ மூலம் பேசும் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநில சிறைத்துறை அதிகாரி கூறினார்.
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் முதன் முதலாக இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி மாநிலத்தில் உள்ள மகளிர் சிறைகள் மற்றும் திறந்தவெளி சிறையில் உள்ள கைதிகளுக்காக ஸ்மார்ட் வீடியோ காலிங் வசதியை மாநில சிறைத்துறை தொடங்கி இருக்கிறது.
கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் அல்லது உறவினருடன் 5 நிமிட நேரம் பேசலாம். இதற்கு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும். புனே, எரவாடா சிறையில் இந்த வசதி சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டு இருந்தது. தற்போது மகளிர் சிறைகள் மற்றும் திறந்தவெளி சிறைகளில் இந்த வசதி தொடங்கப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
கைதிகள் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்கள் உறவினர்களுடன் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் சிறைத் துறையில் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள மொபைல் நம்பரில் பேச முடியும்.
வீடியோ கால் செய்ய ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறைக் கைதிகளுக்கான நல நிதியில் இருந்து இந்த போன்கள் வாங்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
கைதிகள் வீடியோ காலில் பேசும்போது அவர்கள் குடும்ப விஷயங்கள் பற்றி மட்டுமே பேசுகிறார்களா என்பதை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கண்காணிப்பார்.
|