டமாஸ்கஸ், ஆக. 8:
சிரியா அதிபர் பஷார்-அல் அசாத்துக்கு விசுவாசமான அரசு ராணுவ டாங்குகள், போராட்டக்காரர்கள் வசமுள்ள அலெப்போ மாவட்டத்தில் புதன்கிழமை நுழைந்தன.அங்கு ஏற்பட்ட மோதலில் மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.இந்த தகவலை சுதந்திர சிரியா ராணுவம் அறிவித்துள்ளது.இப்போது சலாஹுதீன் மாவட்டம் வரை போர் பரவியுள்ளது என்று அதிபருக்கு எதிரான படையின் கமாண்டர் வாசல் அயூப் தெரிவித்தார். அலெப்போ நகரின் வடமேற்கே பல்வேறு மாவட்டங்களில் அதிபரின் படை பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதலில் புதன்கிழமை அதிகாலை 12 பேர் உயிரிழந்தனர்.அதே மாகாணத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனை சிரியாவின் மனித உரிமைக்கான கண்காணிப்பகம் தெரிவித்தது. ராணுவத்தின் பீரங்கித் தாக்குதலின்போது, ஒரு வீட்டின் மீது குண்டு விழுந்தது. இதில், ஒரு பெண்ணும் 2 குழந்தைகளும் இறந்தனர்.எனவே, அலெப்போ நகரில் உள்ள பொதுமக்கள் குறித்து சர்வதேச பொது மன்னிப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் பொதுமக்களுக்கு எது நேரிட்டாலும், அதனை சம்பந்தப்பட்டவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சர்வதேச பொது மன்னிப்பு சபை இரு தரப்பினரையும் எச்சரித்துள்ளது.
|