ஜெனிவா : பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத், "பொலோனியம்" என்ற விஷம் வைத்து கொள்ளப்பட்டாரா என்பது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வகம் பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக 40 ஆண்டு காலம் தொடர்ந்து கடுமையாக போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த போது, 75 வயதான யாசர் அராபத் நோய்வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம் பாரிசுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 11ம்தேதி இவர், பாரிஸ் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் மரணமுற்றார். இவருடைய இறப்பில் பாலஸ்தீன தலைவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கோமா நிலையில் அராபத் இறந்ததால், பிரேத பரிசோதனை ஏதும் செய்யப்படாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், யாசர் அராபத் இறக்கும் போது, மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையை சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வகம் கடந்த மாதம் வெளியிட்டது. அராபத் இறக்கும் போது அவரது உடலில் கொடிய விஷமான "பொலொனியம்' இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அராபத் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை உறுதியாக நிருபிக்க வேண்டுமென்றால், அவர் உடலை மீண்டும் தோண்டியெடுத்து தான் ஆராய்ச்சி செய்ய மற்றும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூறும் உரிமை அராபத்தின் மனைவி சுகாவுக்கு மட்டுமே உள்ளது என சுவிட்சர்லாந்து நாட்டின் கதிர்வீச்சு இயற்பியல் துறை தலைவர் பிரான்காய்ஸ் புக்கட் தெரிவித்திருந்தார். பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள, ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட, யாசர்அராபத்தின் உடலை மீண்டும் தோண்டியெடுத்து, பரிசோதனை செய்ய, பாலஸ்தீன நிர்வாகமும், அராபத்தின் மனைவி சுகாவும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
|