|
|||||
உலகம் முழுவதும் தமிழிசை மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது- இசைக்கல்லூரி முதல்வர் தகவல்! |
|||||
உலகம் முழுவதும் தமிழிசை மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது என இசைக்கல்லூரி முதல்வர் முனைவர் மீனாட்சி கூறினார். சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இசைப்பேராசிரியர் முனைவர் இரா.மாதவி, உலா இலக்கியங்ஙளும், நடனமும் என்னும் பொருளில் உரை நிகழ்த்தினார். சென்னை இசைக்கல்லூரி முதல்வர் முனைவர் மீனாட்சி பேசியதாவது: பாடலுக்கு ஏற்ற இசையும், அதற்கேற்ற நடனங்களையும் நிகழ்த்துவது பண்டைக் காலத்தில் இருந்தே தமிழ்ச் சமூகத்தில் நிலவி வருகின்றது. இருப்பினும் தமிழ் மொழி எப்படி பல்வேறு காலகட்டங்களில் அன்னிய மொழிகளின் தாக்கத்திற்கு ஆளானதோ, அது போலவே தமிழிசையும் பாதிப்பிற்கு உள்ளானது. தமிழ்ப்பாடலுக்கு இசையமைத்துப் பாடுவதும், தமிழிசையை அறங்கேற்றம் செய்வதும், ஒரு குற்றமாகவே பார்க்கப்பட்டது. இப்படி தமிழிசையை அறங்கேற்றம் செய்தவர்களை சபாக்களில் இருந்தே நீக்கிய வரலாறும் உண்டு. வரலாற்றுக் காலங்களில் ஜமீன்தார்களுக்கும், மன்னர்களுக்கும் இசை நிகழ்ச்சிகள் தஞ்சையை மையமாக வைத்தே நடத்தப்பட்டன. பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களை மகிழ்விக்க சென்னைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு சென்னைக்குப் பல இசைக் கலைஞர்கள் இடம் பெயர்ந்தனர். அப்போதெல்லாம் தமிழ்ப்பண்களுக்கு, தெலுங்குப் பாடல்களே பாடிய நிலை இருந்தது. இந்தப் பாடல்களை மக்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையே இருந்து வந்தது. தமிழிசைக்கு ஒரு எழுச்சி ஏற்பட்டது என்றால், அது 20-ம் நூற்றாண்டில் தான். அப்ரகாம் பண்டிதர், ரா.சு. சண்முகம் செட்டியார் ஆகியோரால் அது நிகழ்ந்தது எனலாம். சென்னையில் தமிழிசைச் சங்கம் அமைத்து, தமிழ்ப்பாடல்களுக்கு இசையமைத்துப் பாடும் முறையும், அதற்கேற்ப நடனங்களை அரங்கேற்றம் செய்யும் கலையும் படிப்படியாக அக்காலத்திலேயே வளர்ந்து வந்தது. உலகம் முழுவதும் தமிழிசைக்கு மீண்டும் ஒரு மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டு உள்ளது. இன்று பல்வேறு நாடுகளில் தேவாரம், திருவாசகம், உலா இலக்கியங்களுக்கு இசையமைத்துப் பாடுவதோடு, அதற்கேற்ப நடன அரங்கேற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு சென்னை இசைக் கல்லூரி முதல்வர் முனைவர் மீனாட்சி பேசினார். உலகத்தமிழாரய்ச்சி நிறுவன வழிகாட்டுதலுடன். இந்த ஆண்டு உலகத் தமிழிசை மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், அயல்நாட்டுத் தமிழர் புலத்தின் உதவிப் பேராசிரியருமான கு.சிதம்பரம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் கோ.விஜயராகவன் தலைமை தாங்கினார்.அண்ணா பல்கலைக்கழக தமிழ் வளர்ச்சி மைய இயக்குனர் அருட்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். |
|||||
by Mani Bharathi on 09 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|