பிரபல தமிழ் எழுத்தாளர் பூமணி அவர்கள் எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நாவலுக்கு இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கிய உலகில் மிக உயரிய விருதாக சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசையும், பாராட்டுப்பத்திரத்தையும் கொண்டதாகும்.
இந்த ஆண்டு 20 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது குறித்த அறிவிப்பு, டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் தமிழ் மொழிக்கான விருது, பிரபல எழுத்தாளர் பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’ என்ற நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். இவர் 1947 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர்.
பூமணி பல்வேறு இலக்கியப் பங்களிப்பை தமிழில் தொடர்ந்து செய்து வருகிறார். இவரின் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவை.
அஞ்ஞாடி நாவல் 19 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் சமணர் கழுவேற்றம், பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி, நாயக்க மன்னர்களின் வருகை, பாளையக்காரர்களிடையே நடைபெற்ற உள்நாட்டு மோதல்கள், ஜமீன்கள் அமைப்பு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.
மேலும் 19 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தாதுவருஷப் பஞ்சத்தினால் அபோது மக்கள் எதிர்கொண்ட துயரங்களை கண்முன் நிறுத்தும் விதமாக அத்தனை யதார்த்தமாக பதிவு செய்துள்ளது 'அஞ்ஞாடி' .
|