ஓர்மையும், கூர்மையும், வேகமும், வலிமையையும் கூடப் பெற்ற மனதில் ஒரு குணத்தையோ, ஒரு சக்தியையோ, ஒரு உருவத்தையோ கற்பனை செய்து கொண்டு அதனால் வரும் வேறுபாட்டைத் தன் உயிராற்றலிலேயே உணர்வது யந்திரம் (Medium) இதுவே உயிர்க்கலப்பு (To become one with it)....
அந்த நிலையில் வாழ்வின் நலத்திற்கும், செம்மைக்கும் உயர்வுக்கும், லட்சியத்துக்குமான சங்கற்பங்களை (suggestions) தேர்ந்தெடுத்து அதனைத் திருப்பித் திருப்பி மனதில் சுழல விடுகிறோம். இதுவே தந்திரம். யந்திரத்தை வாழ்வின் பயனாக்கிக் கொள்ளல் தான் தந்திரம்.(To exploit it). பக்தி மார்க்கத்தில் இதை வேண்டுதல் (Prayer) என்பார்கள். மனம் குவிதலை பக்தி மார்க்க மந்திரம் என்றும், தோத்திரத்தைப் பக்தி மார்க்கத்தின் யந்திரம் என்றும் சொல்லலாம்.
நவக்கிரக தவத்தில் அவற்றின் குணங்களை எண்ணுகிறோம். அவற்றோடு உயிர்க்கலப்பு பெறுகிறோம். இது யந்திரம். வாழ்க்கை நலத்திற்கு அவற்றின் ஆற்றல் பயனாகும் என்று சங்கற்பம் செய்து கொள்கிறோம். இது தந்திரம்.
இதே மந்திர, யந்திர, தந்திரங்களைச் சடங்குச் சம்பிரதாயமாக (Traditional Rituals) செய்தால் அது ஹோமம், வேள்வி எனப்படுகிறது. பொருள் தெரிந்து, முறை தெரிந்து பயன் வரும் வழி தெரிந்து அறிவு பூர்வமாகச் செய்வது 'தவம்'.
|