சென்னையில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் சுமனுக்கு உடல் உறுப்புகள் செயல் இழந்து விடுகிறது. மாற்று உறுப்புகளை பொருத்தினால் தான், தன்னால் உயிர் வாழ முடியும் என்பதை அறியும் சுமன் அதற்காக மனிதர்களை கொன்று அவர்களின் உடல் உறுப்புகளை விற்று, பணம் சம்பாதிக்கும் அருண் விஜய்யின்(விக்டர்) கும்பலிடம் உதவியை நாடுகிறார்.
சுமனின் உடலுக்கு பொருந்தும்படியான உறுப்புகள் அமெரிக்காவில் வசித்து வரும் அனுஷ்காவிடம்(தேன்மொழி) இருப்பதை அறியும் அருண் விஜய் குரூப்.. அனுஷ்காவை கடத்த திட்டமிடுகின்றனர்.
அருண் விஜய் குரூப்பின், அனுஷ்கா கடத்தல் திட்டத்தை தெரிந்துகொள்ளும் போலீஸ் கமிஷனரான அஜித்(சத்யதேவ்), அனுஷ்காவுக்கு தெரியாமலேயே அவரை காப்பாற்ற அவரும் ஒரு திட்டம் போடுகிறார்.
இந்நிலையில், அனுஷ்கா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு பயணிக்கிறார். தனது திட்டத்தின் படி, அஜித்தும் அமெரிக்கா சென்று, அனுஷ்கா பயணம் செய்யும் விமானத்தின் இருக்கைக்கு பக்கத்திலேயே தானும் பயணிக்கும்படி ஏற்பாடு செய்கிறார்(இது தான் படத்தின் ஒப்பனிங் சீன்).
விமான பயணத்தை கண்டு பயப்படும் அனுஷ்கா, தைரியமாக அருகில் அமர்ந்திருக்கும் அஜித்தை பார்க்கிறார். இவர்களது பயணம் நீண்ட தூரம் என்பதால் (அமெரிக்கா - இந்தியா) இருவரும் ஒருவரையொருவர் அறிமுகபடுத்திக்கொள்கின்றனர். அனுஷ்காவிடம் சகஜமாக பழகும் அஜித்தை அனுஷ்காவுக்கு பிடித்துப் போய்விடுகிறது.
மறுநாள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னை சந்திக்கலாம் என்று கூறிவிட்டு அனுஷ்காவை பிரிகிறார் அஜீத். மறுநாள் அந்த இடத்திற்கு செல்லும் அனுஷ்காவை அருண் விஜய் குரூப் கடத்த முயற்சிக்க அவர்களிடம் இருந்து அனுஷ்காவை காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்க்கிறார் அஜீத்.
அஜித்தைத்தான் கொல்ல வந்திருப்பதாக நினைக்கும் அனுஷ்காவிடம், அவர்கள் உன் உடல் உறுப்புகளுக்காக தான் உன்னை கடத்த வந்தார்கள் என்று அஜித் கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைகிறார் அனுஷ்கா.
இதன் பின்னர் அஜீத்தின் பிளாஸ் பேக் ஆரம்பிக்கிறது. சிறு வயதிலேயே தன் தந்தையை இழக்கும் அஜீத் எந்த பாதையில் செல்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார். பின்னர் போலீஸ் அதிகாரியாகிறார். இந்நிலையில் அஜித்துக்கு ரவுடி கும்பலை சேர்ந்த அருண்விஜயுடன் அறிமுகம் ஏற்படுகிறது, நாளடைவில் அது நட்பாக மாறுகிறது. ஆனால் தனது குறிகோளில் குறியாக இருக்கும் சத்யதேவ் சமயம் பார்த்து அந்த ரவுடி கும்பலை போட்டுத்தள்ளுகிறார், அருண்விஜய் மட்டும் தப்பிக்கிறார்.
இந்த எண்கவுண்டருக்கு பிறகு அஜித் சிறந்த போலீஸ் அதிகாரியாக மாறுகிறார், அப்போது தான் த்ரிஷா (ஹேமாலினி) என்ற பெண்னை பார்கிறார், பார்த்ததும் காதலில் விழுகிறார் அஜித்.
த்ரிஷாவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது கணவர் இறந்துவிட்டார். நான்கு வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கின்றனர்.
இந்நிலையில் அருண்விஜய், த்ரிஷாவை தீர்த்து கட்டுகிறார். திரும்ப எண்கவுண்டர் அவதாரம் எடுக்க நினைக்கும் சத்யதேவ் குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அதிரடியான வாழ்க்கையில் இருந்து விழகி வாழ்ந்துவருகிறார். அருண்விஜய், அஜித்திடம் வாழும் திரிஷாவின் குழந்தையையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்.
இறுதியில், அருண் விஜய், அஜீத்திடம் வாழும் குழந்தையை கொன்றாரா.. இல்லை அஜீத், அருண் விஜயை தீர்த்து கட்டினாரா... அனுஷ்காவின் காதல் என்ன ஆனது என்பதே படத்தின் மீதி கதை....
அதிரடியான போலீஸ் அதிகாரி, யதார்தமான காதலன், அன்பான அப்பா என பல நிலைகளில் அஜீத் தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்.
அஜித்திடம் நட்பாக பழகும் போதும் சரி.. அவரையே கொள்ள நினைக்கும் போதும் சரி... வில்ல தனத்தில் மிரட்டி இருக்கிறார் அருண் விஜய். அவருக்கு இனிமேல் தமிழ் சினிமாவில் கண்டிப்பாக ஒரு நல்ல இடம் கிடைக்கும்.
நாயகிகள் அனுஷ்கா, திரிஷா இருவருக்குமே சரிசமமான கதாபாத்திரம். குடும்ப பெண்ணாகவும், பரதநாட்டிய கலைஞராகவும் வரும் திரிஷா நமது மனதில் எளிதாக பதிகிறார். மாடர்ன் பெண்ணாக வரும் அனுஷ்காவும் நடிப்பில் மிளிர்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் விவேக்குக்கு இப்படத்தில் காமெடி செய்ய அதிக வாய்ப்பு இல்லை என்றாலும், அவர் வரும் காட்சிகளில் கைதட்டல் வாங்குகிறார்.
ஹாரிஸ் இசையில் இரண்டு பாடல்கள் ஹிட்... மற்றவை கேட்கும் ரகம் தான்... பின்னணி இசை சிறப்பாக வந்திருக்கிறது.
என்னை அறிந்தால் படத்தின் ஒரு சில காட்சிகளைப் பார்க்கும் போது, வேட்டையாடு விளையாடு சாயலில் இருந்தாலும்... கிளைமேக்சில் பட்டைய கிளப்பியிருக்கிறார் கவுதம் மேனன்.
மொத்தத்தில் என்னை அறிந்தால்..... பார்க்கலாம் பாஸ்...
|