நாட்டிலேயே முதன் முறையாக தமிழகத்தில் வரும் நாடாளமன்ற தேர்தலில் ஓட்டுப் போட, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுக்க கிராமங்கள்தோறும், தன்னார்வ இளைஞர்களைக் கொண்ட, "கிராமக் குழு" அமைக்கும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் செலவின பொது இயக்குனர் தாஸ், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் ஆகியோர் கூறியதாவது: ஓட்டு போட அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதை தடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். தென் மாநிலங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடக, புதுச்சேரியில், அதிக அளவில், ஓட்டு போட பணம் வழங்கப்படுகிறது; கேரளாவில், இந்த கலாசாரம் இல்லை. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை, தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. தமிழகத்தில், முதன் முறையாக, கிராமங்கள்தோறும் "கிராமக் குழு" அமைக்கும்படி, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். கிராமக் குழுவில் அரசியல் கட்சி சாராத, தன்னார்வ இளைஞர்கள் இடம் பெறுவர். அவர்கள் ஓட்டுப்போட வேண்டியதன் அவசியம் குறித்து, மக்களிடம் எடுத்துரைப்பர். அத்துடன் ஓட்டுக்கு பரிசு வழங்கப்படுவதை, தடுத்து நிறுத்துவர். இப்பணியில், கிராமக்குழு இளைஞர்களும் ஈடுபடுத்தப்படுவர். மாவட்டம் தோறும் இலவச டெலிபோன் எண் ஏற்படுத்தப்படும். அதில், பொதுமக்கள் புகார் செய்தால், 24 மணி நேரத்திற்குள், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
|