மத்திய பிரதேச மாநிலம், துர்க்கா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் உயிரிழந்ததை அடுத்திய தாட்டியா மாவட்ட ஆட்சியர் உட்பட நான்கு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தில் ரத்தன்கர் என்ற பகுதியில் உள்ள துர்கா தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாலத்தில், நேற்று முன்தினம் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் 115 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அம்மாநில அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தாட்டியா பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இந்த அசம்பாவித சம்பவத்திற்கு, மாவட்ட ஆட்சியர் சாங்கெட் போந்த்வி, காவல் கண்காணிப்பாளர் சோலங்கி, மஹிப் தேஜஸ்வி, துணை பிரிவு காவல்துறை அதிகாரி பாசவி ஆகியோரே காரணம் என்பது தெரிய வந்தததாக சவுகான் தெரிவித்தார். இதனையடுத்து, அந்த நான்கு பேரையும் பணியிடை நீக்கம் செய்வதற்கு மத்திய பிரதேச மாநில அரசு பரிந்துரை செய்தது. மத்திய பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று அவர்கள் 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
|