|
|||||
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் - 3வது நீதிபதி தீர்ப்பு! |
|||||
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என 3-வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கி உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் கொடுத்த 18 எம்.எல்.ஏக்களை பேரவைத் தலைவர் தனபால் கடந்த பிப்ரவரி மாதம் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல், தங்க.தமிழ்செல்வன் உள்ளிட்ட 18 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும் பேரவைத் தலைவர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தீர்ப்பு வழங்கினார். நீதிபதி எம்.சுந்தர் வழங்கிய தீர்ப்பில், இயற்கை நியதிக்கு எதிராக பேரவைத் தலைவர் முடிவு எடுத்துள்ளார். தகுதி நீக்கம் செய்வதற்கு முன் 18 பேருக்கும் போதிய வாய்ப்பு தரப்படவில்லை. எனவே, பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லாது என்று உத்தரவிட்டார். இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் தீர்ப்பில் இறுதி முடிவை எட்ட இந்த வழக்கை 3வதாக ஒரு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று கூறி எம்.சத்யநாராயணனை 3வது நீதிபதியாக நியமனம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்குகளை விசாரித்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன் ஆகியோர் வாதிட்டனர். முதல்வர் பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹி, வக்கீல் திருமாறன் ஆஜராகி வாதிட்டனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதாடும் போது, ஆட்சியை கவிழ்க்க திட்டம் தீட்டியதாக 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஜக்கையன் அளித்ததாகச் சொல்லப்படும் புகார் தொடர்பான ஆவணங்களை எங்கள் தரப்புக்கு பேரவைத் தலைவர் தரவில்லை. உட்கட்சி விவகாரம் என்பதால், 18 பேருக்கு எதிராக கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர, தகுதி நீக்கம் செய்து உத்தரவிட முடியாது என்று வாதிட்டார். பேரவைத் தலைவர் மற்றும் முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதாடும்போது, 18 பேரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். தகுதி நீக்க உத்தரவு அவசரகதியில் பிறப்பிக்கப்படவில்லை. சட்டம் மற்றும் இயற்கை நியதிக்கு உட்பட்டே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஆகஸ்ட் 31ம் தேதி தள்ளிவைத்தார். இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. |
|||||
by Mani Bharathi on 25 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|