பீகார் மாநிலத்தில் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 22 மாணவர்கள் பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் 30 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பீகார் மாநிலத்தில் தர்மசதி கந்தவான் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஓன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மதியம் வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டது. சாதம், பருப்பு மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவை உணவாக வழங்கப்பட்டன. இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனை அடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள் உடனடியாக மருத்துவ மனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே சில மாணவர்கள் இறந்தனர். மருத்துவமனையில் சிலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். மொத்தம் 22 மாணவர்கள் இறந்தனர். மேலும், 30 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
|