முழுக்க முழுக்க விவசாயத்தை ஆதரித்தும், விளைநிலங்களை அபகரித்து விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலை எதிர்த்தும் கவுண்டமணி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் 49-ஒ. மனைவி விசாலினி, மகள் வைதேகியுடன்
திருகோணம் என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நம்ம கவுண்டமணி. அவருடைய மனைவியாக விசாலினியும், மகளாக வைதேகியும் வருகிறார்கள். இந்த ஊரின் எம்.ஏல்.ஏ.வாக இருக்கிறார் ஜெயபாலன். இவரது மகன் திருமுருகன். இவர்கள் இந்த ஊர் மக்களுக்கு நல்லது ஏதும் செய்யாமல் இருந்து வருகிறார்கள்.
அந்த கிராமத்தின் வழியாகத் தேசியநெடுஞ்சாலை அமையவிருக்கிறது என்று முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட கூட்டணி, அந்த ஊரில் இருக்கும் விளைநிலங்களை வளைத்துப் போட நினைக்கிறது. விவசாயி என்றாலே வறுமையும் இருக்கும் என்பதால் அதைப் பயன்படுத்தி அதிக விலை தருவதாகக் கூறி, நிலங்களைக் கையகப்படுத்துகிறார்கள். நிலங்களையும் பிடுங்கிக்கொண்டு பேசியபடி பணமும் தராமல் ஏமாற்றுகிறார்கள்.
இதை கவனிக்கும் கவுண்டமணி, மக்களுக்கு நிலங்களை பெற்றுத்தர வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில் எம்.எல்.ஏ. ஜெயபாலன் இறக்கிறார். இதனால் அந்த ஊருக்கு இடைத்தேர்தல் வருகிறது. இதில் ஜெயபாலனின் மகன் திருமுருகன் எம்.எல்.ஏ.வாக போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக பல கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் கவுண்டமணி மக்கள் மற்றும் மற்ற கட்சிக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு ஓட்டுக்கு இவ்வளவு பணம் என்று நிர்ணயித்து கட்சிக்காரர்களை கேட்கிறார். ஆனால் கட்சிகாரர்களோ பணம் கொடுத்து விட்டால் ஊர் மக்கள் மதிக்க மாட்டார்கள் என்று கருதி பணம் தர மறுக்கிறார்கள்.
இதனால் பிச்சைக்காரன் ஒருவனை வேட்பு மனு தாக்கல் செய்ய வைக்கிறார் கவுண்டமணி. இறுதியில் கவுண்டமணி நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு நிலத்தை வாங்கி தந்தாரா? தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள்? என்பதே படத்தின் மீதி கதை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் கவுண்டமணி கொஞ்சமும் சக்தி குறையாமல் வந்திருக்கிறார். தோற்றத்தில் கொஞ்சம் மாற்றம் இருந்தாலும் குரலிலும் உடல்மொழியிலும் எவ்வித மாற்றமும் இல்லை. அதே நக்கல் அதே நையாண்டி. கூடவே நல்லகருத்துகளையும் சொல்லிக் கைதட்டல் பெறுகிறார். இடைவேளைக்குப் பிறகு விவசாயிகளின் நலனுக்காக குரல் கொடுக்கும் அவர், அரசியல் கட்சிகளின் குறைகளை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்திருக்கிறார். தைரியமாக இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கவுண்டமணிக்கு பெரிய பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.
கவுண்டமணிக்கு அடுத்து வட்டிக்காரராக வரும் சோமசுந்தரமும், எம்.எல்.ஏ.வாக வரும் ஜெயபாலனும், அரசியல்வாதியாக வருகிற திருமுருகனும் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
நிலங்களை விற்பதற்காக விளம்பரப்படமெடுக்கும் நான்கடவுள் ராஜேந்திரன், சாம்ஸ் ஆகியோர் வரும் காட்சிகளில் வெடிச்சிரிப்பு. முதன்முறையாக சுடுகாட்டுக்காக நிலம் விற்பதுபோன்ற காட்சிகளை வைத்துக்கொண்டு இன்றைய உறவுகளின் நிலையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
விவசாயிகளின் வாழ்க்கை பிரச்சனையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் ஆரோக்கியதாஸ், அதில் வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். அரசியல்வாதிகள் யாரும் மக்கள் பிரச்சனையை கண்டுக்கொள்ளவில்லை. விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது என்ற கருத்தை சொல்ல வந்த இயக்குனருக்கு பெரிய கைதட்டல்.
ஆதி கருப்பையாவின் ஒளிப்பதிவும், கே-வின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘49 ஓ’ படம் அல்ல பாடம்.
|