|
|||||
கீழடியில் 4-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு! |
|||||
கீழடியில் நடந்த 4-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்றது. சிவகங்கை மாவட்டம், கீழடி பள்ளிச் சந்தை புதூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய தொல் பொருள் அகழ்வாராய்ச்சி துறையினரால் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. 2014 முதல் 2017 வரை நடைபெற்ற மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளில் தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டிடங்கள், பல்வேறு வகையான மணிகள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், இரும்பால் செய்யப்பட்ட போர்க் கருவிகள், உறை கிணறுகள், வெளிநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, தொல்லியல் துறையின் துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி பூமி பூஜையுடன் தொடங்கிய 4-ம் கட்ட அகழாய்வு பணியில் 2 தொல்லியலாளர்கள், 4 அகழ்வாய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான களப் பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 6 மாதங்கள் நடைபெற்ற இந்தப் பணி கடந்த செப்.30 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், 34 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் 5,820 தொல் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து, கடந்த 13 ஆம் தேதி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆகியோர் அகழாய்வு செய்த இடத்தையும், கிடைக்கப்பெற்ற தொல் பொருட்களையும் நேரில் பார்வையிட்டனர். அங்கு கிடைத்த தொல் பொருட்கள் முழுவதும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, மதுரையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது எனவும், இன்னும் ஓரிரு மாதங்களில் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 4-ம் கட்ட அகழாய்வுப் பணிகளில் கிடைத்த தொல் பொருட்களை பொதுமக்கள் பார்வைக்காக வைக்க உள்ளது எனவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். |
|||||
by on 16 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|