இந்த வருட பொங்கல் தமிழக திரையரங்குகளைப் பொறுத்தவரை ஒரு அதிரடி பொங்கலாகதான் இருக்கப்போகிறது. ஏனென்றால் இந்த வருட பொங்கலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறக்கூடிய ஐந்து படங்கள் வெளியாக இருப்பதாக இதுவரை வந்த தகவல்கள் தெரிவிக்கிறது.
ஏற்கனவே, ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள ஐ திரைப்படமும், கவுதம் மேனன் இயக்கத்தில், அஜீத், திரிஷா, அனுஷ்கா நடித்துள்ள என்னை அறிந்தால் திரைப்படமும், சுந்தர் சி இயக்கத்தில், விஷால், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ஆம்பள திரைப்படமும் வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கதில் சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா நடிப்பில் உருவாகியுள்ள காக்கி சட்டை திரைப்படமும், முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லக்ஷ்மி மேனன் நடிக்கும் கொம்பன் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிகின்றன.
திட்டமிட்டப்படி இந்த 5 திரைப்படங்களும் வெளியாகும் பட்சத்தில், படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
தமிழகத்தில் மொத்தம் 1200 தியேட்டர்கள் இருந்தாலும், அதில் 900 தியேட்டர்களில் மட்டுமே புதிய படங்கள் ரிலீஸ் ஆகும். இந்த 900 தியேட்டர்களில், ஐ படம் 400 தியேட்டர்களிலும், என்னை அறிந்தால் 400 தியேட்டர்களிலும் வெளியாகும் பட்சத்தில் ஆம்பள, காக்கிசட்டை, கொம்பன் ஆகிய படங்களுக்கு சேர்த்தே 100 தியேட்டர்கள் மட்டுமே ஒதுக்க வேண்டியதாக இருக்கும்.
எனவே தியேட்டர் கிடைக்காத பட்சத்தில் ஒன்று அல்லது இரண்டு படங்களின் ரிலீஸ் தள்ளிபோக வாய்ப்புள்ளது.
|