|
|||||
பழைய கதைகள் இறந்து கொண்டிருக்கின்றன" - சென்னை இலக்கியம் மற்றும் கலை விழா 3.0’ நிகழ்ச்சியில் வருந்திய எழுத்தாளர் |
|||||
சென்னை சர்வதேச மையம் (சி.ஐ.சி) சார்பில் கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தில் ‘சென்னை இலக்கியம் மற்றும் கலை விழா 3.0’ நடைபெற்றது. சி.ஐ.சி தலைவர் கோபால் சீனிவாசன் தலைமை வகித்து Experts Speak Insights on Foreign Policy என்ற நூலை வெளியிட்டார். முதல் பிரதியை ஐ.சி.டி அகாடமி இயக்குநர் என்.லட்சுமி நாராயணன் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வில்லியம் டேல்ரிம்பிள், அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன் கொட்கின் உட்பட 20 எழுத்தாளர்கள் பங்கேற்று 8 அமர்வுகளில் உரையாற்றினர். நேபாள எழுத்தாளர் ஸ்மிருதி ரவீந்திரன் எழுதிய The Woman Who Climbed Trees என்ற பிரபல நூல் குறித்த விவாதமும் நடைபெற்றது.
சி.ஐ.சி தலைவர் கோபால் சீனிவாசன் பேசும்போது, "சென்னை மக்களிடம் அறிவுசார் உணர்வைத் தூண்டும் இடமாக அமைய வேண்டும் என்ற நோக்கில்தான் சென்னை சர்வதேச மையம் தொடங்கப்பட்டது. தற்போது 10-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இனிவரும் காலங்களில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பிரபலங்களின் கருத்துகள், எண்ணங்கள் ஆகியவை பரவலாக அனைவரையும் சென்றடையும் வகையில் புத்தகங்களாகவும் வெளியிட உள்ளோம்..:" என்றார்,
எழுத்தாளர் பி.சாய்நாத் "சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான, மன உளைச்சலை ஏற்படுத்தும் செய்திகள், பதிவுகளைப் படிப்பதில் அதிக நேரம் செலவிடுவதால் மனநலம் பெரிய அளவில் பாதிப்படைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவது நமது கவனத்தைக் குறைத்து, நினைவகத்தைப் பலவீனப்படுத்துகின்றன. நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பது மட்டுமின்றி, அதை எங்கு, எப்படிப் படிக்கிறீர்கள் என்பது முக்கியம்..." என்றார்.
எழுத்தாளர் ஸ்மிருதி ரவீந்திரன் பேசுகையில், "ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு கல்யாண நிகழ்வுகளும் பல கதைகளைக் கொண்டிருக்கும். ஆனால், இன்றைய இன்ஸ்டகிராம் உலகத்தில் இதுபோன்ற கதைகள் சொல்லப்படுவது இல்லை. அதனால், பழைய கதைகள் இறந்து கொண்டிருக்கின்றன. வலைத்தளங்கள் வழியே பழைய கதைகளை நாம் பாதுகாக்க வேண்டும்..." என்றார்.
இலக்கிய விழாவையொட்டி, பங்கேற்ற எழுத்தாளர்களின் நூல்கள் சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் சி.ஐ.சி நிர்வாக இயக்குநர் சந்திரமவுலி, அமைப்புக் குழு உறுப்பினர்கள் டி.எஸ்.திருமூர்த்தி, வித்யா சிங், நிகழ்ச்சிக் குழுத் தலைவர் வி.கே.சபரிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
|
|||||
by hemavathi on 15 Dec 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|