புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் சங்க கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தினர் மேற்கொண்ட அகழாய்வில் செங்கலால் கட்டப்பட்ட கால்வாய் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.சங்ககாலக் கோட்டையின் தடயம் நிலைத்திருக்கும் இடம் தான் புதுக்கோட்டை மாவட்ட பகுதியான பொற்பனைக்கோட்டை. கோட்டைச்சுவர்,அகழி போன்றவை இருப்பதனை அறிந்து தொல்லியல் ஆய்வாளர்களான இராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், ஆ. மணிகண்டன் ஆகியோர் இப்பகுதியை ஆய்வு செய்ய வேண்டும் என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் சார்பில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவினால் இப்பகுதியினை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தினர், தொல்லியல் துறையின் பேராசிரியர் இனியன் தலைமையில் அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐந்து குழிகள் தோண்டப்பட்டு, ஆய்வில் ஈடுபட்ட போது ஒரு குழியில் இரண்டரை அடி ஆழத்தில் செங்கல் கட்டுமானத்தால் ஆன கால்வாய் கண்டறியப்பட்டுள்ளது.பொற்பனைக்கோட்டையின் அரண்மனைமேட்டு பகுதிக்கு அருகான விவசாயி ஒருவரது நிலத்தில் பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில்,தற்போது சங்க கால செங்கல் கட்டுமானமும் கண்டறியப்பட்டுள்ளது.
இ.மணிகண்டன் அவர்கள், செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தந்துள்ளது எனவும், தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும் போது தமிழ்நாட்டிற்கும், இந்திய வரலாற்றுக்கும் புதிய வெளிச்சம்,இந்த அகழாய்வினால் உண்டாகும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
|