|
||||||||
ஹஜ் புனிதப் பயண விசா முறையில் அதிரடி மாற்றங்கள் - குழந்தைகளுக்குத் தடை |
||||||||
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். இதனால் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்தியாவிலிருந்தும் ஏராளமான இஸ்லாமியர்கள் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஹஜ் புனிதப் பயண விசா முறையில் சவுதி அரேபிய அரசு பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளது. அதிகக் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்படும் பாதுகாப்பு பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு சவூதி அரேபிய அரசு 2025 ஹஜ் பயணத்தில் குழந்தைகள் பங்கேற்கத் தடை விதித்துள்ளது. மேலும் முதல் முறையாக யாத்ரீகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
"குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், ஹஜ் யாத்திரையின் போது ஏற்படக்கூடிய எந்தவொரு தீங்கையும் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு முதல் முறையாகச் செல்லும் யாத்ரீகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஹஜ் பருவத்திற்கான பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. சவுதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் Nusuk செயலி அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் தகவல்களைச் சரிபார்த்து, தங்களுடன் பயணம் செய்பவர்கள் குறித்தும் பதிவு செய்ய வேண்டும்.
இந்நிலையில் சவுதி அரேபிய அரசு தனது விசா கொள்கையில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 1 முதல், இந்தியா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் சிங்கிள் நுழைவு விச்சாக்கலுக்கு மட்டுமே தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அங்கீகாரம் இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் நடைமுறையைக் கட்டுப்படுத்துவதே இந்த மாற்றத்தின் நோக்கம் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
ஹஜ் காலத்தில் சவுதி அரேபியாவிற்குப் பல நுழைவு விசாக்களை வைத்திருக்கும் பலர் நாட்டிற்குள் நுழைந்து பதிவு செய்யாமலேயே புனித யாத்திரைக்குச் செல்கிறார்கள் என்றும் இதன் விளைவாக, ஹஜ்ஜின் போது புனித யாத்திரைத் தலங்கள் மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த புதிய விசா விதி அல்ஜீரியா, பங்களாதேஷ், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, பாகிஸ்தான், சூடான், துனீசியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்குப் பொருந்தும்.
இதனால் இந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகளைப் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. சில நாடுகளிலிருந்து சுற்றுலா, வணிகம் மற்றும் குடும்ப வருகைகளுக்கான ஒரு வருடப் பல-நுழைவு விசாக்களை சவுதி அரசாங்கம் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது. புதிய விதியின் கீழ், இந்த நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும் ஒற்றை-நுழைவு விசாவிற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
||||||||
by hemavathi on 18 Feb 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|