ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு (Fifth World Tamils Economic Conference) (www.economicconference.in), 11-அக்டோபர்-2018 தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளில் முதன்மைபெற்றுள்ள தமிழ் வழி தலைவர்கள் , தொழிலதிபர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழா சங்கமித்திரா விழா மன்றத்தில் இதன் தலைவர் முனைவர் வி.ஆர். எஸ்.சம்பத் அவர்களின் தலைமையில் சிறப்பாக மூன்று நாட்கள் நடைபெற்றது. தமிழ் பொருளாதார மாநாட்டில் தமிழகம், இந்தியா மற்றும் 30 உலக நாடுகளைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் கலந்துகொண்டு தமது நாட்டில் நடைபெறும், நடைபெற இருக்கின்ற பொருளாதார நிலை மற்றும் வணிகம் சார்ந்த நிகழ்வுகளைத் திறம்பட எடுத்துக்கூறினார்கள்.
இந்த மாநாட்டை புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கயானா பிரதமர் திரு.மோசஸ் நாகமுத்து, மொரீசியஸ் அதிபர் முனைவர்.பரமசிவம் பிள்ளை, மொரிசியஸ் அமைச்சர் யோகிடா, பப்புவா நியூ கினியில் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல், மலேசிய இந்திய சேம்பர் தலைவர் Dr.கென்னத் ஈஸ்வரன், சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ரவீந்தரன், தென்னாப்பிரிக்க முன்னாள் துணை மேயர் திரு.லோகி நாயுடு, ஆஸ்திரேலிய முன்னாள் துணை மேயர் திரு.பாலா பாலேந்திரா, பாண்டிச்சேரி துணை சபாநாயகர் திரு.சிவக்கொழுந்து, சூடான் தூதர் (Ambassador, Head of Mission, South Sudan), எல் சல்வடோர் தூதர் (Ambassador of El Salvador New Delhi), Consul General, French Consulate General in Pondicherry, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் , உயர்நீதி மன்ற நீதிபதி Dr.விமலா , மேலும் பல நாடுகளின் துணை தூதர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநில அமைச்சர்கள், தொழிலதிபர்கள், பொருளாதார அறிஞர்கள் என்று மிகப்பெரிய சங்கமமாக இந்த மாநாடு இனிதே நடந்தேறியது.. இதை ஒருங்கிணைத்து நடத்திய Dr.வி.ஆர்.எஸ்.சம்பத் அவர்கள் 30க்கும் நாடுகளில் பல பொறுப்புகளில் இருக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்தது தமிழுக்கு மிகப்பெரிய பெருமைதரத்தக்க, பொருளாதார நம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன. அதில் ஒரு அமர்வாக “தமிழ் மொழியின் மூலம் வணிகத் தொடர்புகளும் தொழில் வளர்ச்சியும்” (Business communication anad professional ethics through Tamil language)என்ற தலைப்பில் மாண்புமிகு தமிழக கலாச்சாரத்துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் தலைமையில் மலேசியாவை சேர்ந்த சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் தலைவர் முனைவர் எம்.மாரிமுத்து அவர்களும், ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கையின் அமைப்பாளர் முனைவர் வி.ஜானகிராமன் அவர்களும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் மாநிலக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு அவர்களுடன் திருச்சிராப்பள்ளியில் இயங்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லுரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களும் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள்.
அதில் முனைவர் துரை.மணிகண்டன் “தொழில்நுட்ப வழியில் தமிழ்மொழியின் ஊடாக வணிகம் சிறக்க என்ன வழிமுறைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அவரின் கருத்தாக தமிழ்மொழியின் வழி வணிகத்தை நம்மால் பெருக்க வழியுண்டு அதற்கு நாம் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன என்றார். உலகில் இருக்கும் மக்களிடம் நம் பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்ய தடையாக இருப்பது மொழியே. இதனை நன்கு உணர்ந்து மொழி தடையாக இருக்காமல் அவரவர் தாய்மொழியிலேயே உலகில் வாணிகம் நடந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அப்படி நடக்க வேண்டுமெனில் அவரவர் தாய் மொழியிலேயே (தமிழில்) உலகநாடுகளில் இருக்கும் மக்கள் பொருளை வாங்கிக்கொள்ள செல்பேசி மொழிபெயர்ப்புத்(Speech translation) தேவை அதற்கான மென்பொருளை நாம் உலக அரங்கில் உருவாக்க வேண்டும் என்றார். மேலும் உலக அளவில் தமிழ்மொழிக்கென தனியான சொற்கோவையை (Tamil word net) உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகத்தில் சிறுகடைகளில் இருந்து பெரிய பல்பொருள் அங்காடி வரையிலும் விற்பனை செய்யும் கடைகளில் தமிழில் பற்றுச்சீட்டை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத நிறுவனங்களுக்குத் தனியாக 2 சதவீதம் வரியை உயர்த்தி கட்டவேண்டுமென்று தமிழக அரசு ஆணையை வெளியிட்டால் தமிழில் தொழில்நுட்பம் வளரவும் புதிய தமிழ் மென்பொருள் உருவாகவும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்றார். உள்நாட்டுப் உற்பத்திப் பொருளை விற்பனைசெய்ய சிறிய குறுஞ்செயலிகளை (Smart application) உருவாக்கி ஒன்றினைக்கலாம். இதனால் வாங்குவோர் விற்போருக்கு இடையே இருக்கும் இடைவெளி குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் விற்பனை மற்றும் வியாபாரம் உலக அரங்கில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
|