|
||||||||
வரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது .. |
||||||||
ஹார்வார்டில் தமிழ் இருக்காய் அமைக்கும் மிகப்பெரிய சாதனை நிகழ்வு, உலகத் தமிழர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மே, 2018 -ல் நிறைவேறியது . ஹார்வார்ட் பல்கலைக்கழகக் குழுவுடன் இறுதிப் பேச்சுவார்த்தை நடத்தி , மீதம் கொடுக்கவேண்டிய தொகையை கையளித்து திரும்பிய ஹார்வார்ட் தமிழ் இருக்கை செயற்குழுவின் சார்பாக முனைவர் சொர்ணம் சங்கர் இந்த தகவலை தெரிவித்தார் .
தமிழ் பல்வேறு பெருமைகளை கொண்டிருந்தாலும், உலகின் தொன்மையான மொழியாக விளங்கினாலும், கடந்த பல ஆண்டுகளாக அதற்கு கிடைத்திருக்க வேண்டிய பெருமைகளும், சிறப்பும், உலக அங்கீகாரமும், ஆராய்ச்சி வசதிகளும் இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் கலந்துகொண்ட திருமதி.வைதேகி ஹெர்பர்ட் , மருத்துவர் சம்பந்தன் மற்றும் மருத்துவர் ஜானகிராமன் ஆகியோரது சந்திப்பில் உதித்த சிந்தனைதான் இந்த ஹார்வார்ட் தமிழ் இருக்கை.
உலகின் தொன்மையான பல மொழிகளுக்கு ஹார்வார்டில் தமிழ் இருக்கை இருக்கிறது, பன்னாட்டு மாணவர்கள் அந்த மொழியை அறிந்துகொள்ளவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது , அந்த வாய்ப்பு தமிழுக்கு இதுவரை கிடைக்கவில்லையே என்ற ஒரு சிந்தனை, ஒரு மிகப்பெரிய திட்டமாக உருவாகி, மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட நாற்பது கோடி ரூபாய் (6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிதி திரட்டி உலகத் தமிழர்கள் சாதித்திருக்கிறார்கள்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தமிழ்த் தொண்டுக்கு தலைமையேற்ற மருத்துவர்கள் திரு.சம்பந்தன் ஐயா மற்றும் திரு.ஜானகிராமன் இருவரும் தங்கள் பங்களிப்பாக ஆளுக்கு அரை மில்லியன் டாலர்கள் நன்கொடை கொடுத்து ஒரு மில்லியனில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்கள் ..
இது தமிழ் சமூகத்திற்கு புதிய சாதனை. காரணம் நமக்குத் உள்ள சரியான தேவையை சிந்திக்கவேண்டும் , சிந்திப்பவர்கள் தங்கள் கையிலிருந்து நன்கொடை கொடுத்து நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும், அதை எல்லாம் விட உலகின் எந்த மூலையில் சிறு தொகையை தருகிறேன் என்று சொன்னாலும் உடனே அங்கே சென்று அவர்களை ஊக்கப்படுத்தி திட்டம் நிறைவேறும்வரை தொடர்ந்து உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பயணிக்கவேண்டும். இதற்கு சிந்தனை , நிதியை விட மிகப்பெரிய நேரப் பங்களிப்பு வழங்க முன்வரவேண்டும். இது அனைத்தும் தமிழ் சமூகத்தில் முன்மாதிரியான இந்த கொடை வள்ளள்களால் தாய்மொழிமேல் கொண்ட பற்றுடன் ஏற்றுக்கொண்ட அர்பணிப்பு உணர்வே இவ்வளவு பெரிய சாதனையை செய்து முடிக்க அடித்தளமாக அமைந்தது . தமிழக அரசு, தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகள் இதில் இணைந்தது இதை மேலும் வலுவான திட்டமாக மாற்றியது .
தமிழ் சமூகத்தில் தங்கள் மிகப்பெரிய அர்பணிப்பால் இன்று முன்மாதிரியாகப் பார்க்கப்படும் நிலையில் மருத்துவர்கள் இருவரும் உயர்ந்துள்ளார்கள் .
பல்வேறு சோதனைகள், பல்வேறு தடைகள், முட்டுக்கட்டைகள் ஏற்பட்டாலும், ஹார்வர்ட் திட்டம் குறித்து வதந்திகள் பரப்பப்பட்டாலும், அனைத்தையும் இனிய புன்னகையுடன் எவரையும் காயப்படுத்திவிடாமல் ஒரு அறிக்கையை அளித்துவிட்டு அடுத்த நிதிபெறும் கூட்டத்திற்கு செல்லும் பண்பு மருத்துவர்களிடம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது.
ஒருவழியாக அனைத்து நடைமுறைகளும் முடிந்து மீதம் கொடுக்கவேண்டிய பணமும் ஹார்வார்ட் குழுவிடம் கையளிக்கப்பட்டு திரும்பிய முனைவர்.சொர்ணம் சங்கர் அவர்களிடம் வலைத்தமிழ் நிருபர் உரையாடியபோது குறிப்பிடுகையில், ஹார்வார்ட் எதிர்பார்த்த அனைத்து தேவைகளும் நிறைவடைந்து பணம் முழுவதுமாக கையளிக்கப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் , அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கைகள் அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது .
இதன் அடுத்த கட்டமாக சரியான பேராசியரை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து மருத்துவர். ஜானகிராமன் அவர்கள் வெளியுட்டுள்ள அறிக்கையில்
ஹார்வர்ட் தமிழ் இருக்கை நன்கொடையாளர்களுக்கும் வணக்கம், வாழ்த்துக்கள்! மே மாதம் 4ஆம் நாள், நானும், சம்பந்தம், சங்கர், ஆகியோர் முனைவர் செல்வகுமார்அவர்கள் தலைமையில், ஹார்வர்ட் பல்கலைக்கழக நிர்வாகிகளை சந்தித்தோம்.தென்னாசிய துறையின் தலைவர் திரு.சுனில் அம்ரித் ,நீனா சிப்செர்(Nina Zipser , Dean of Faculty Affairs and Planning),பேராசிரியர் விட்சல், பரிமள், மற்றும் நிர்வாகி குரோன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர். உங்களின் எண்ணங்களையும், பரிந்துரைகளையும் பிரிதிபலிக்கும் கோரிக்கைகளை அவர்களிடம் அளித்தோம். உடனேயே தமிழ் இருக்கைக்கு,பேராசிரியரை தேடும் பணி தொடங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
தமிழ் இருக்கைக்கு தேவையான ஆறு மில்லியன் டொலர்களை எட்டும் மீதித் தொகையினை காசோலையாக அளித்து நம் கடமையினை நிறைவேற்றிவிட்ட மகிழிச்சியுடன் நிர்வாகத்தினரிடம் விடை பெற்றோம்.
இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.
அன்புடன்
ஜானகிராமன், தலைவர், தமிழ் இருக்கை குழுமம்.
தமிழ் இருக்கைக்கு தேவையான ஆறு மில்லியன் டொலர்களை எட்டும் மீதித் தொகையினை காசோலையாக அளித்து நம் கடமையினை நிறைவேற்றிவிட்ட மகிழிச்சியுடன் நிர்வாகத்தினரிடம் விடை பெற்றோம். அன்புடன் ஜானகிராமன், தலைவர், தமிழ் இருக்கை குழுமம்.
|
||||||||
by Swathi on 08 May 2018 5 Comments | ||||||||
கருத்துகள் | |||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|