|
|||||
"குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்" - மணமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை |
|||||
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 3ம் தேதி நாகப்பட்டினத்துக்குப் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு நாகை மாவட்டம் புத்தூரில், திமுக மாவட்டச் செயலாளரும், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவருமான ந.கௌதமன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
அப்போது பேசிய முதல்வர், "மத்திய அரசு மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியைத் திணிக்க முயற்சி செய்கிறது. அடுத்து, தொகுதி மறுசீரமைப்பு எனத் தமிழ்நாட்டின் உரிமையை மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மூலம், நாட்டின் பிரதமரைத் தேர்வு செய்யும் உரிமையைத் தமிழ்நாட்டிற்குக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து விவாதிக்கவே, வரும் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள 40க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான கட்சிகள் வருவதாகக் கூறியுள்ளனர். குறிப்பிட்ட சிலர் மட்டும் வர முடியாது எனக் கூறியுள்ளனர். இந்தத் தொகுதி மறுவரையறை என்பது திமுக பிரச்சனை அல்ல. இது தமிழ்நாட்டின் பிரச்சனை.
முன்பெல்லாம் திருமண விழாவுக்குச் சென்று அங்கு மணமக்களை வாழ்த்திவிட்டு குழந்தைகளைப் பொறுமையாகப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறுவோம். ஆனால், இப்போது அப்படிச் சொல்ல முடிவதில்லை. மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால், நான் அப்படிச் சொல்ல மாட்டேன். சீக்கிரம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். தம்பதிகளுக்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்று தான். உங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்" என்றார்.
|
|||||
by hemavathi on 04 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|