கிரையோஜெனிக் என்ஜின் சோதனையில் வெற்றி பெற்றுள்ள ககன்யான் திட்ட விண்கலம்
விண்வெளிக்கு மனிதரை அனுப்புவதற்கான இந்தியாவின் கனவு திட்டமே ககன்யான். மூன்று வீரர்கள் பூமியின் தாழ் சுற்றுவட்டப் பாதைக்கு சென்று, ஏழு நாட்கள் ஆய்வுகள் மேற்கொண்டு, பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. ககன்யான் திட்ட விண்கலம் வடிவமைக்கப்பட்டு பல்வேறு சோதனைகள் முடிவுற்றுள்ளன. தற்போது அவ்விண்கலத்தைச் செலுத்தும் இராக்கெட்டிற்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.இச்சோதனை நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றுள்ளது.
கிரையோஜெனிக் என்ஜின் என்பது உறைநிலையில் உள்ள எரிபொருட்கள் கொண்டு இயங்குகிறது. திரவ ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.விண்வெளியில் ஆக்சிஜன் இல்லை என்பதால் எரிவதற்கு துணை புரியும் திரவ ஆக்சிஜன் உடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. இந்த என்ஜினின் செயல்பாடு சிக்கலானதாகும். இந்த எரிபொருள்களை கையாள்வதும் கடினமாகும். எனவே இவ்வெற்றி முக்கியமானது.மேலும் விண்கலத்தினை செலுத்துவதற்கான கடைசி கட்ட சோதனையாகவும் இது உள்ளது.
இவ்விண்கலத்தில் பயணிக்கும் வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெற இருக்கின்றனர். 2024 -ஆம் ஆண்டில் வீரர்களுக்கு முன் "வியோமா மித்ரா"என்ற பெண் ரோபோ இந்த விண்கலத்தில் பயணிக்க உள்ளது. இவ்விண்கலத்தில் வெற்றிகரமாக பயணித்து விண்வெளியில் ஆய்வு செய்து, வீரர்கள் தரையிறங்கும் நேரத்தில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை அடுத்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய பெருமையை நம் இந்தியா பெறும்.
|