|
|||||
கொல்கத்தா -சென்னை... 600 ரூபாய் கட்டணத்தில் வெறும் 3 மணி நேரத்தில் பயணிப்பது சாத்தியமா? |
|||||
கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வெறும் மூன்று மணி நேரத்தில், அதுவும் ரூ.600 கட்டணத்தில் பயணிப்பது கற்பனையாகத் தோன்றலாம். ஆனால் இந்தக் கனவு விரைவில் நனவாகப் போகிறது. ஐஐடி மெட்ராஸ்
நிறுவனத்தின் இன்குபேஷன் செல்லால் ஆதரிக்கப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான வாட்டர்ஃபிளை டெக்னாலஜிஸ் (Waterfly Technologies), இதைச் செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவையும் இது மிகவும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு பெரும் வைரலாகியுள்ளது. “கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தொழில்நுட்ப முயற்சி பற்றிய செய்திகள் வருகின்றன. இதில் எனக்குப் பிடித்தது நமது பரந்த நீர்வழிகளைப் பயன்படுத்துவதற்கான வாக்குறுதி மட்டுமல்ல; இந்த வாகனத்தின் வடிவமைப்பு மிகவும் அற்புதமானது என்பதும்தான்!” என்று ஆனந்த் மஹிந்திரா பிரபலச் சமூக ஊடகமான X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஏரோ இந்தியா 2025-ல், இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹர்ஷ் ராஜேஷ், மின்சாரக் கடல்-கிளைடர்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பயணத்தை மலிவாகவும் வேகமாகவும் மாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இவை தண்ணீரிலிருந்து புறப்பட்டு நான்கு மீட்டர் உயரத்தில் பறக்கும்.
“இதன் மூலம் கொல்கத்தாவிலிருந்து சென்னை வரையிலான 1,600 கி.மீ பயணத்தை ஒரு இருக்கைக்கு வெறும் ரூ.600-க்கு நிறைவேற்ற முடியும். இது மூன்று அடுக்கு ஏசி ரயில் பெட்டியின் கட்டணத்தைவிட மலிவானது” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த ஸ்டார்ட்-அப்பின் மற்றொரு இணை நிறுவனரான கேசவ் சவுத்ரி, இதன் பின்னால் உள்ள அறிவியலை விளக்கினார். சிறப்பு விமானம் நீரின் மேற்பரப்புக்கு மிக அருகில் பறக்கும் என்றும், இதன் மூலம் தரை விளைவைப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது இறக்கைகளில் உராய்வைக் குறைக்கிறது மற்றும் காற்று மெத்தை காரணமாக லிஃப்டை அதிகரிக்கிறது. இதனால் குறைந்த வேகத்தில் கூட பறக்க முடியும்.
உதாரணமாக, வழக்கமான ஏர்பஸ் A320 அல்லது போயிங் 737 விமானம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்குப் பறக்க 2.5 முதல் 3 டன் வரை விமான விசையாழி எரிபொருளை (ATF) பயன்படுத்துகிறது. இதன் தற்போதைய விலை கிலோ லிட்டருக்குச் சுமார் ரூ.95,000 ஆகும்.
இருப்பினும், வாட்டர்ஃபிளையின் சீக்ளைடரால் இந்தச் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும். இதன் விளைவாக, மிகவும் மலிவு விலையில் பயணச்சீட்டுக் கிடைக்கும்.
மேலும், இந்த விமானத்தின் இயந்திரம் வழக்கமான விமானங்களைப் போலச் சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை. “ஓடுபாதை முடிவதற்குள் ஒரு விமானம் புறப்பட வேண்டும். ஆனால் நமக்கு முழுக் கடலும் இருக்கிறது. ஆகவே ஓடுபாதை முடிவற்றது. மேலும் இது இயந்திரத்தின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தாது.”
தற்போது, இந்தத் திட்டம் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. ஏரோ இந்தியா கண்காட்சியில், இவர்கள் அதன் வடிவமைப்பை மட்டுமே வழங்கியுள்ளார்கள். 100 கிலோ எடையுள்ள முதல் முன்மாதிரி அடுத்த சில மாதங்களுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 2025-ம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு டன் அளவுள்ள முன்மாதிரி பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் 2026-ம் ஆண்டுக்குள் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்குப் பயணிக்கக்கூடிய 20 இருக்கைகள் கொண்ட மாதிரியை உருவாக்கவும் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ஐஐடி மெட்ராஸ் நிதி உதவி செய்கிறது. மேலும் பாதுகாப்புத் துறையிலிருந்து இன்னும் அதிக நிதி திரட்ட முயன்று வருகிறார்கள். எதிர்காலத்தில், இந்தத் தொழில்நுட்பத்தைச் சரக்கு கப்பல் போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தலாம்.
|
|||||
by on 03 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|