மொரீஷியஸ் நாட்டில் அடுத்த மாதம் நடைபெறும் தேசியத் தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடான மொரீஷியஸ், கடந்த 1968-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய நாளாக மொரீஷியஸ் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் மொரீஷியஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் நவீன் ராம்கூலம் பேசுகையில். "நமது நாட்டின் 57-ஆவது சுதந்திர தினத்தை விரைவில் கொண்டாட இருக்கிறோம். நமது தேசியத் தினக் கொண்டாட்டத்தில் எனது அழைப்பை ஏற்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பதை இந்த அவைக்குத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
பிரதமர் மோடி தனது தொடர்ச்சியான பணிகளுக்கு மத்தியில் நமது தேசிய விழாவில் பங்கேற்க உள்ளார். ஒரு சிறப்புமிக்க ஆளுமையைக் கவுரவிப்பதில் நாடு பெருமிதம் கொள்கிறது. இந்தியா - மொரீஷியஸ் இடையே நிலவிவரும் நெருங்கிய நட்புறவுக்குப் பிரதமர் மோடியின் வருகை ஒரு சான்றாகும்." என்று தெரிவித்தார்.