|
||||||||
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் 'தமிழ் அறிவு வளாக'த்துக்கு சாஸ்தா தமிழ்ச்சங்க இயக்குநர் ராமன் வேலு பங்களிப்பு! |
||||||||
![]() சென்னை தரமணியில் இயங்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தமிழகத்தின் அரிய பொக்கிஷக் காப்பகமாக விளங்கி வருகிறது. நூலகம். ஆவணக் காப்பகம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ஆராய்ச்சி நூலகம் 1994-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கே தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் 500,000 ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன.. 30 லட்சத்திற்கும் அதிகமாகப் பக்கங்கள் எண்ணிமப்படுத்தப்பட்டு, பாதுகாத்து மின் நூலகத்தை உருவாக்கியுள்ளது. மேலும் பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்த நூலகம் பணிபுரிகிறது. தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், கோட்டையூரைச் சேர்ந்த ரோஜா முத்தையா, எழுத்துப் பலகை எழுதும் ஓவியராவார். அவர் 50,000 நூல்களும் இதழ்கள், திருமண அழைப்பிதழ்கள், துண்டுப் பிரசுரங்கள், துண்டறிக்கைகள் போன்ற பிற 50,000 ஆவணங்களையும் சேகரித்திருந்தார். . . 1992ஆம் ஆண்டு அவர் மரணமடைந்த பிறகு அவரது சேகரிப்பைக் காப்பாற்ற உலகளாவிய முயற்சியை சிகாகோ பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அச்சேகரிப்புகள் சென்னைக்கு மாற்றப்பட்டு, 1994ஆம் ஆண்டு நிறுவனமாக உருவாக்கப்பட்டது.
இச்சேகரிப்பைப் பராமரிப்பதற்கான சிகாகோ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது, தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டு, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையாக உருவாக்கப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்கள் நிறைவேறிய பிறகு, நூலகம் விரிவுபடுத்தப்பட்டது.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் பல நூல் பாதுகாப்புத் திட்டங்களை - National Endowment for the Humanities, Ford Foundation, Wellcome Trust for the History of Understanding Medicine, Endangered Archives Project, TATA Trusts, India Foundation for the Arts, National Archives of India, Tamil Nadu Government உள்ளிட்ட நிறுவனங்களுடனும் சில தனிநபர்களுடனும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
நூல் சேகரிப்பு, நூற்பட்டியல், நூல் பாதுகாப்பு உள்ளிட்ட செயல்பாடுகளிலிருந்து நூல்களை எண்ணிமமாக்குதல், பொது ஆய்வுரைகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், ஆராய்ச்சிகள் முதலியவற்றை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளையும் விரிவுபடுத்தியது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். 2007ஆம் ஆண்டு சிந்துவெளி ஆய்வு மையத்தையும் 2021ஆம் ஆண்டு பொதுவியல் ஆய்வு மையத்தையும் நிறுவியது.
தற்போது தமிழ்நாடு அரசால் குத்தகைக்கு விடப்பட்ட இடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. நூலகத்தின் சில முக்கிய நூலகச் செயல்பாடுகளைத் தக்கவைக்க 2023 முதல் தொடர் மானியங்களைத் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
தமிழின் மரபார்ந்த பாரம்பரியத்தை வெளிப்படுத்தி, அறிவுசார் விவாதத்திற்கு பொதுத்தளத்தில் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் செயல்படுகிறது. இந்நூலகம் உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், அருங்காட்சியகங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிறந்த முறைமைகளை உருவாக்கியும் மேற்கொண்டும் வருகிறது.
இம்முயற்சியின் பகுதியாக, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் உள்ளடக்கிய ஒரு தமிழ் அறிவு வளாகம் உருவாக்குவதற்கான பணிகள் தீவிரமாகியுள்ளன. இச்செயல்பாடு நிறைவுபெற இரண்டு ஆண்டுகளும் ஆகும்.
இந்த அறிவு வளாகத்துக்காக உலகம் முழுவதும் நிதி திரட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள தமிழ் இருக்கை நிறுவனம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் பல அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள் தங்களுடைய மாகாணங்களில் இதற்கென கருத்தரங்கங்கள் நடத்தி வருகின்றன. வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் வட அமெரிக்க முருகன் கோவிலில் ஜூன் 29-ஆம் நாளன்று சிந்து சமவெளி 100 என்ற தலைப்பில் சிந்து சமவெளி ஆய்வு மைய ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன் ஆகியோர் தலைமையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
டல்லாஸ், சான் அன்டோனியோ டெக்ஸாஸ், சான்பிரான்சிஸ்கோ கலிபோர்னியா, அட்லாண்டா ஜார்ஜியா, பாஸ்டன் மாசசூசெட்ஸ் ஆகிய இடங்களிலும் கருத்தரங்கங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த அறிவு வளாகத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த சாஸ்தா தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் ராமன் வேலு 58,250 ரூபாய் பங்களிப்பு செய்துள்ளார். இதற்கான காசோலையை ஜனவரி 25ம் தேதி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன், சிந்து சமவெளி ஆய்வு மைய ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் வழங்கினார்.
|
||||||||
by hemavathi on 26 Jan 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|