|
||||||||
மாநில அளவிலான திருக்குறள் போட்டிகள்... : லட்சங்களில் பரிசை அள்ளிய ஆசிரியர்கள் |
||||||||
குமரியில் வானுயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவைச் சிறப்புற நடத்தி வருகிறது தமிழக அரசு. அதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. அப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக இணை இயக்குநர் சங்கர சரவணன் அறிமுகவுரையாற்றினார். 'வள்ளுவர் குறள் குடும்பம்' இராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியின் முதல்நிலை போட்டி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 21.12.2024 அன்று நடத்தப்பட்டதில், 6131 நபர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் நான்கு குழுக்கள் என்ற அடிப்படையில் 12 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, 38 மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட 150 குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். மாநில அளவிலான திருக்குறள் வினாடி-வினா இறுதிப்போட்டியில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி பட்டதாரி ஆசிரியர் பொ.கணேசன், கேத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சக்திவேல் மற்றும் கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி தமிழாசிரியர் ஆனந்த் குழுவினர் முதல் இடம் பிடித்தனர். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கொமத்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அறிவொளி, எஸ்.அம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வாசுகி, அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வன சுந்தரி ஆகியோர் 2-ம் பிடித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சொர்ணம், முனைஞ்சிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சிராஜீநிஷா மற்றும் கூட்டப்புளி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜாய்ஸ் கர்சீலியாகுழு 3-ம் இடம் பிடித்தனர். முதல் இடம் பிடித்த குழுவிற்கு ரூ.2 லட்சம், இரண்டாம் இடம் பிடித்த குழுவிற்கு ரூ.1.5 லட்சம், 3-ம் இடம் பிடித்த குழுவிற்கு ரூ.1 லட்சம் பரிசு, பாராட்டுச் சான்றிதழை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார். தொடர்ந்து 4,5,6-ம் இடங்கள் பிடித்த குழுக்களுக்கும் தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் 6 குழுக்களுக்கு ரூ.5.25 லட்சம் மதிப்பிலான பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், பார்வையாளர்களுக்கான சிறப்புப் பரிசாக 3 பேருக்குத் தலா ரூ.2000 வழங்கப்பட்டது. நிகழ்ச்சி குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கூறும்போது, "திருக்குறள் தமிழர்களுக்கான பொதுவான ஒரு நூல். அது பள்ளி, கல்லூரித் தேர்வுகள், போட்டித் தேர்வுப் பாடத்திட்டங்களைத் தாண்டியும் தொடர்ச்சியாகப் படிப்பதற்கான வாய்ப்பைத் தரக்கூடியது. திருக்குறள் என்ற புரிதல் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும், அறிவுசார்ந்த தகவல்களைப் பொழுதுபோக்கான செயல்பாடுகள் மூலம் எடுத்துச் செல்வதற்காகவும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன" எனத் தெரிவித்தார். |
||||||||
by hemavathi on 02 Jan 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|