|
||||||||
உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டமும் அது ஏற்படுத்தியுள்ள விளைவும் |
||||||||
திருக்குறள் இதுவரை எத்தனை இந்திய, வெளிநாட்டு மொழிகளில் வெளிவந்துள்ளது என்ற ஆய்வு தமிழ் சமூகத்தில் முழுமையாக நிகழ்த்தப்படவில்லை. கடைசியாக வெளிவந்த ஒரு மொழிபெயர்ப்பில் குறிப்பிடும்போது 172 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று கூறுவதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை எனபதை அனைவரும் அறிவோம். உலக மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டது திருக்குறள்தான் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் தமிழுக்கு பெருமைதானே என்று கேட்கக்கூடும். அல்லது மத நூல்களை விட அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டது திருக்குறள்தான் என்று சொல்வதில் திருக்குறள் அனைத்தையும் விஞ்சிய பெருமைகொள்கிறதே இதை ஏன் ஆராயவேண்டும் என்று கேட்கலாம். இப்படிப்பட்ட பெருமைகளை தமிழர்களான நாம்தான் சொல்லிக்கொள்கிறோமே தவிர, இந்தியாவோ, அறிவுலகமோ, வெளிநாடோ இதுவரை ஏற்றுக்கொண்டுள்ளதா? ஏற்றுக்கொண்டு ஏதும் வினையாற்றியுள்ளதா? தேசிய நூலாகிவிட்டதா? உலக நூலாக அங்கீகரிக்க ஏதும் அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அல்லது தேசிய நூலாக , யுனெசுகோ ஏற்றுள்ளத் தக்க வகையில் பல ஆண்டுகாலம் கருத்தரங்கங்கள், நூல்கள், குழுக்கள் என்று தொடர் முயற்சி எடுத்தாலும் இன்னும் அதற்கான அடித்தளமாக , அதை உறுதிப்படுத்த ஒரு முதல்கட்ட கொள்கை முடிவை இந்திய அரசு எடுக்க ஏதும் திடமான நகர்வுகள் நடந்துள்ளதா என்று கேட்டால் விடை நமக்கு வியப்பை ஏற்படுத்தும். திருக்குறளை தேசிய நூலாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ள, உலக நூலாக யுனெசுகோ ஏற்றுக்கொள்ள நமக்கு மொழிபெயர்ப்புகள் வரலாறும், தொகுப்பும், மொழிபெயர்ப்புகளை உயிர்ப்பித்து பயன்பாட்டில் கொண்டுவருவதும் முதற்படியாகும். இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு மேல் , பல மொழிகளில் , பல நாடுகளில் ஆங்காங்கே வெளியிடப்பட்ட பல மொழிபெயர்ப்புகள் பல இன்று பயன்பாட்டில் இல்லை. பதிப்பகம், ஆசிரியர் என்று எவரையும் எட்ட முடியாத நிலையில் உள்ளது. அந்த மொழிபெயர்களில் வந்துள்ளது அனால் யாரும் பயன்படுத்தவில்லை என்பது பெருமையன்று. அதை பெருமிதமாக எடுத்துக்கொண்டு , மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம். தமிழில் "இருப்பதைப் பரப்புவதும், இல்லாததை உருவாக்குவதும்" என்ற நோக்கில் பயணிக்கும் வலைத்தமிழ் குழு, தமிழில் பிறந்தநாள் பாடல் ஒன்றை ஆங்கிலத்திற்கு இணையாக உருவாக்கி தமிழ்நாட்டின் பாடத்திட்டத்திலும் , அமெரிக்கா உள்ளிட்ட பாடத்திட்டத்திலும் வெளியிடப்பட்டு , சிங்கப்பூர் சிறுவர் மியூசியத்தில் இடம்பெற்ற நிலையில், இரண்டாவது வரலாற்றுத் திட்டமாக "உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம்" என்ற ஒரு திட்டத்தை 2019 ஆண்டு அறிவித்தது. இந்தத் தொகுப்பைக்குறித்து 2018 ஆம் ஆண்டு முகநூலில் வலைத்தமிழ் ஆசிரியர் திரு.ச.பார்த்தசாரதி ஒரு பதிவு போட்டு , அதன் பின்பு 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் முறையான ஒரு குழு உருவாக்கப்பட்டு இன்று ஐந்து ஆண்டுகளில் பல நிலைகளைக் கடந்து அவை முறையாகத் திருக்குறள் மொழிபெயர்ப்பு அச்சுப்பிரதிகள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுத் தொகுக்கப்பட்டு, முழு விவரங்களுடன் ஒரு நூலாக ஆங்கிலத்தில் "Thirukkural Translations in World Languages " என்ற ஆங்கில நூலை இத்திட்டத்தின் இறுதி அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி உலகத் தொடர்பாளராகவும், செயின்ட் லூயிசில் வசிக்கும் திருக்குறள் ஆர்வலர் திரு.இளங்கோ தங்கவேலு திட்ட ஒருங்கிணைப்பாளராகவும், மருத்துவர்.அஷ்ரப் , திரு.சி.இராசேந்திரன் (வள்ளுவர் குரல் குடும்பம்) , திரு.செந்தில் துரைசாமி (டெக்சாஸ் ), திரு.அஜய் குமார் செல்வன் (சென்னை) ஆகியோர் திட்டக்குழுவாகவும் அமைத்துக்கொண்டு கலத்தில் இறங்கினோம். இதுவரை 58 மொழிபெயர்ப்புகளை முழுமையாக அடையாளம் கண்டு, அதில் வெளிநாட்டு மொழிகளில் 32 மொழிபெயர்ப்பும் , இந்திய மொழியில் 26 மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளது என்ற முக்கிய ஆய்வு முடிவை குழு வெளியிட்டது. அவை எந்த நாட்டில், எந்த பதிப்பாளரால், எந்த ஆண்டு, எந்த மொழிபெயர்ப்பாளரால் வெளியிடப்பட்டது என்று விவரத்துடன், உலக மக்களுக்கு மொழிபெயர்ப்பு சார்ந்து என்னென்ன தகவல்கள் தேவையோ அவை அனைத்தையும் ஒவ்வொரு நூலுக்கும் பட்டியலிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அடையாளம் காணப்பட்டுள்ள அச்சு நூல்களை உலகின் பல நாடுகளிலிருந்தும் தொகுக்கும் பணி முடிக்கிவிடப்பட்டு, தொடர் பால்வழி அழைப்பு ஏற்படுத்தி கூட்டங்கள் நடத்தி அந்தந்த நாட்டிலிருந்து நூல்களை சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இவை தொகுப்பாகி , இன்று உலகின் எங்கும் கிடைக்காத ஒரு முழு திருக்குகள் மொழிபெயர்ப்புத் தொகுப்பாக முதன் முதலாக உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்நூலில் ஒரு முக்கிய உள்ளடக்கமாக, ஐநா சபை , யுனெசுகோ உறுப்பினர் நாடுகளின் விவரம், அங்கு பேசப்படும் மொழிகள் , அதில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட விவரம், இன்னும் மொழிபெயர்க்கப்படாத நூல்களின் விவரம், திருக்குறள் தொடாத நாடுகளின் விவரம் என்று உலக நாடுகள்-மொழிகள்-திருக்குறள் மொழிபெயர்ப்புகள் என்ற ஆய்வினை செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதனால் என்ன பயன்? இந்திய அரசின் பரிந்துரையில் இதுவரை திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்கும் சிந்தனை இல்லை. இந்தியா அங்கீகரித்தபிறகுதான் நாம் யுனெசுகோ மன்றத்தில் வலுவாக கொண்டுசெல்ல முடியும் என்ற நிலை உள்ளது. சிங்கப்பூர் , மொரிசியஸ் உள்ளிட்ட பிற நாடுகள் முன்னெடுத்தாலும், இந்தியாவின் கருத்தே மிக முக்கியமாகக் கருதப்படும். இந்நிலையில், "Thirukkural Translations in World Languages " என்ற இந்த ஆங்கிலத் தொகுப்பு நூல் இரு முக்கியத் தளங்களிலும் தேங்கியுள்ள சிந்தனையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும். மொழிபெயர்ப்பு சார்ந்து கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்க தமிழ்ச் சமூகத்தில் ஒரு குழு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் களப்பணி செய்துள்ள அனுபவத்துடன் இருப்பது திருக்குறளை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்ல ஏதுவாக அமையும் என்று நம்பலாம். மேலும் தரவுகள் அடிப்படையில் நிறுவப்பட்ட இந்த நூல், இன்னும் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்படவேண்டும் என்ற தெளிவையும் ஏற்படுத்தி, அதை செய்யத் தேவையான தொடர் குழுவையும் ஏற்படுத்தி , வழிகாட்டுதலையும் வழங்குவது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வந்த மொழிபெயர்ப்பைவிட இன்னும் சில ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் மொழிபெயர்ப்புகள் வெளிவந்து, உண்மையிலேயே உலக மொழிகளில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாக திருக்குறள் அமையும் என்று நம்பலாம். நூல் வெளிவந்ததும், தரவுகள் அனைத்தும் பொதுவெளியில் பகிரப்பட்டு, அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்படும். மேலும், ஒரு குழு அமைத்து உலகத் தமிழ்ச்சங்கங்கள், செம்மொழி ஆய்வு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு சில ஆண்டுகளில் உலக மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் இதில் உள்ளது. -வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி |
||||||||
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
| by Swathi on 25 Oct 2024 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|