விருதுநகர், வெம்பக்கோட்டை கண்காட்சி அரங்கம் அமைச்சர்களால் துவங்கி வைக்கப்பட்டது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில்,மேட்டுக்காடு என்ற இடத்தில் 2022 - ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வுப் பணியில் யானை தந்தத்தால் செய்த பொருட்கள், அரியவகை மணிகள், சுடுமண் பகடைக்காய், காதணிகள் போன்ற பழங்காலப் பொருட்கள் ஏராளமாக கிடைத்துள்ளன.அப்பொருட்களை மக்கள் பார்வையிடும் வகையில் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அமைச்சர்கள் திரு.இராமச்சந்திரன், திரு.தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தனர்.
திரு.இராமச்சந்திரன் அவர்கள் பேசும்போது கீழடிக்கு இணையாக விஜயகரிசல் குளத்திலும் பழம் பொருட்கள் கிடைத்துள்ளன என்றும்,2000 ஆண்டுகளுக்கு முன்னரே அயல்நாடுகளுடன் கடல் வழி வணிகத் தொடர்பு கொண்டிருந்தவர்கள் தமிழர்கள் என்றும் கூறினார்.
திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பேசுகையில், இரண்டாம் கட்ட அகழாய்விலும் 900 பொருட்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று கூறினார்.விஜயகரிசல்குளத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளது. மூன்று அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு, பல்வேறு பழம் பொருட்கள் மேலும் கிடைத்தவண்ணம் உள்ளன.
|