|
||||||||
ஆடம்பரம் விரும்பாத அண்ணல் |
||||||||
ஆடம்பரத்திலேயே பலருக்கு அதிக நாட்டமிருக்கும் . மற்றவர்கள் தன்னைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக போலித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் . ஒருவன் தனது பகட்டைக் காட்டுவதற்காக ஐந்து விரல்களிலும் மோதிரங்களை மாட்டிக் கொண்டான் . மற்றவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் கையை உயர்த்திப்பேசினான் . ஆனால் யாரும் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை . கொஞ்ச நேரம் கழித்து ஒரு வைக்கோல் படப்பு தீப்பற்றி எரிந்தது . அதை அணைக்க பலர் ஓடி வந்தார்கள் . சீக்கிரம் போங்க சீக்கிரம் போங்க என்றபடி மோதிரக் கையை ஆட்டினான் அவன் . அப்போது ஒரு பெரியவர் ஓடிக் கொண்டே மோதிர மெல்லாம் நல்லாயிருக்கே . எப்போ வாங்கினே என்று கேட்டார் . அப்போது மோதிரக்காரன் நினைத்துக் கொண்டான் “ இந்த வார்த்தையை முன்னாலேயே யாராவது சொல்லியிருந்தா வைக்கோல் படப்புக்கு தீயே வச்சிருக்க மாட்டேன் .” பெருந்தலைவர் காமராசர் ஆடம்பரங்களுக்கு அப்பாற்பட்டவர் . அவரது பண்புகளில் முன் நிற்பது எளிமையே . நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் இவரது எளிமையான தோற்றம் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார் . தென்னிந்தியக் குடியானவனின் முரட்டுத்தோற்றத்தை மூடி மறைக்க எந்த விதமான மெருகும் ஏற்றப்படாதவர் . மலை போன்ற கருப்புமனிதர் . ஒளிவிடும் கண்கள் எளிமையின் சின்னமாகவும் , தேசியத்தின் அடையாளமாகவும் , கதராடையையே அவர் அணிந்தார் . மிகச் சிறந்த காங்கிரஸ் தலைவரான அவர் பெயர் டெல்லி வட்டாரத்தை அசைக்கத் தொடங்கிய வேளை பண்டித நேரு முதன் முதலில் காமராசரைக் காணத் தென்னகம் வருகிறார் . உயர்ந்த அந்தஸ்தை நாடியிருப்பவர் என்ற கற்பனையில் வருகிறார் நேரு . ஆனால் ஓய்வறையில் முதன்முதலில் அவரைக் காணுகிறபோது ஒரு சாதாரண பெஞ்சில் தலைக்கடியில் கையை வைத்துப் படுத்திருந்த எளிமை நிலையைக் கண்டு வியந்து போகிறார் . தோற்றத்தால் மட்டுமல்ல . உள்ளத்தாலும் எளிமையானவர் பெருந்தலைவர் . அடைக்கலம் என்ற பெயருடைய சிறுவன் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தான் . அவனது தந்தை தனது மகன் சிகிச்சைக்காக தலைவரிடம் உதவி கேட்க வந்தபோது “ சாமி , சாமி ” என்று அடிக்கொருதரம் சொன்னார் . இது பெருந்தலைவருக்குப் பிடிக்கவில்லை . “ இந்தா பாருப்பா நானும் எல்லோரையும் போல மனுஷன்தான் வெறும் ஆசாமிதான் . உன்னைப்போல மனுஷ ஜென்மம் தான் . என்னைப்போயி சாமி ஆக்கிடாதே ” என்று கூறினாராம் . கையில் கடிகாரம் கூட கட்டிக்கொள்ளாத முதலமைச்சர் ஒருவரை இந்த உலகம் இதுவரையில் கண்டதுண்டா ? அத்தனை எளிமையாக வாழ்ந்தவர் அவர் . “ காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் “ என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் . |
||||||||
by Swathi on 02 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|