செல்வத்தை இழந்தோமென்று அலமரார்; உள்ள மிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார்.
இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஊக்கம் ஒருவந்தம் கைத்து உடையார் - ஊக்கத்தை நிலையாகக் கைப்பொருளாகக் கொண்டவர் ; ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் - தம் செல்வத்தை யிழந்தாராயினும் அதை யிழந்தேம் என்று துன்புறார்.
ஊக்கத்தினால் வேறு பொருள் புதிதாகத்தேடிக் கொள்ளலா மாதலின் , 'அல்லாவார்' என்றார் . ஒருவந்தம் நிலைபேறு. அது இங்கு நிலைபேறாக என்று பொருள் படுதலாற் குறிப்பு வினையெச்சம். பெயரெச்சமாயின் ஒருவந்தக் கைத்து என ஈறுகெட்டுப் புணர்ந்திருக்கும். கையிலுள்ள பொருள் கைத்து . கையது - கைத்து (கை+து). ஆக்கத்தை உண்டாக்குவது ஆக்கம்; ஆகுபெயர்.ஆதல் வளர்தல், மேம்படுதல். ஆ-ஆகு-ஆக்கம். செல்வம் நிலையான கைத்தன்மை. 'கைத்துண்டாம் போழ்தே கரவாதறஞ் செய்ம்மின் '(நாலடி.19) என்பதனால் அறியப்படும்.