LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 463 - அரசியல்

Next Kural >

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - மேல் எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை, அறிவுடையார் ஊக்கார் - அறிவு உடையார் மேற்கொள்ளார். ('கருதி' என்னும் வினையெச்சம் 'இழக்கும்' என்னும் பெயர்எச்ச வினை கொண்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார்,'செய்வினை' என்றார்.)
மணக்குடவர் உரை:
தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையைச் செய்ய நினையார் அறிவுடையார். இது பிற்பயவாத வினை செய்யலாகாதென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - உறுதியற்ற எதிர்கால வூதியத்தை நோக்கி இருப்பிலுள்ள முதலையும் இழத்தற்கேதுவான முயற்சியை; அறிவு உடையார் ஊக்கார் - அறிவுடையோர் மேற்கொள்ளார். ஊதியத்தையன்றி முதலையும் இழக்கும் செய்வினை, வலியுங் காலமும் இடமு மறியாது பிறன் நாட்டைக் கைப்பற்றச் சென்றுதன் நாட்டையும் இழத்தல் போல்வது. 'செய்வினை' செய்தறிந்த வினை அல்லது செய்யத் தொடங்கிய வினை. பின்னைப் பொருட்கு ஊக்குதல் மேலுஞ் செய்யத்துணிதல். எச்ச வும்மை செய்யுளால் தொக்கது.
கலைஞர் உரை:
பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.
Translation
To risk one's all and lose, aiming at added gain, Is rash affair, from which the wise abstain.
Explanation
The Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.
Transliteration
Aakkam Karudhi Mudhalizhakkum Seyvinai Ookkaar Arivutai Yaar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >