டெல்லி சட்ட சபையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக வாக்காளர்களிடம் கருத்து கேட்கும் பேரணிகளை நடத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் நடந்த டெல்லி சட்ட சபை தேர்தலில், எதிர்க்கட்சியான பாஜக 32 இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது. 2வது இடத்தில் ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால் பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. காங்கிரஸோ, ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசத்தையும் ஆளுநரிடம் கோரியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆனால் இந்தக் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக வாக்காளர்களிடம் கருத்து கேட்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான பேரணிகளையும் நடத்த ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டிருக்கிறது.
|