ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஆற்றின் நிலை தளர்ந்தற்று - வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும்; வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - அகன்ற நூற்பொருள்களை உட்கொண்டு அவற்றின் மெய்ம்மையை உணரவல்லார் அவைக்கண் வல்லானொருவன் சொல் இழுக்குப்படுதல். (நிலை தளர்ந்து வீழ்தல் 'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும்' (குறள்.24) காத்தொழுகியான்,பின் இழுக்கிக் கூடா ஒழுக்கத்தினால் பயன் இழத்தலே அன்றி இகழவும்படும் என்பதாம். இதனான் அதன்கண் இழுக்கியவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந்தாற் போல இகழப்படும், அகன்ற கல்வியைக் கேட்டறியவல்லார் முன்னர்த் தப்புதல். இது தப்புதல் வாராமற் சொல்லல் வேண்டுமென்றது
தேவநேயப் பாவாணர் உரை:
வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு -பரந்த நூற்பொருள்களை உள்ளத்திற் கொண்டு அவற்றின் உண்மையை உணரும் உயர்ந்த அறிஞரவையில் வல்லானொருவன் வழுப்படல்; ஆற்றின் நிலைதளர்ந்த அற்றே -வீடு பேற்றின் பொருட்டுத் துறவுநெறிக்கண் நெடிது ஒழுகினவன் அந்நெறியினின்றும் தவறி வீழ்ந்தை யொக்கும். ஆற்றின் நிலைதளர்தலாவது, அருள்மேற்கொண்டு கொலை தவிர்ந்து கடுந்தவஞ்செய்து ஐம்புலனு மடக்கியவன் கூடாவொழுக்கத்துட்படுதல். அத்துணைக் கேடானதே நல்லவையில் வல்லான் வழுப்படல். "ஆனைக்கும் அடிசறுக்கும்." என்பது, நாப்பிசகைக் காக்குமே யன்றி அறிவுப் பிசகைக் காவாது. கூடாவொழுக்கத்தான் பயனிழந்து இகழப்படுவது போன்றே, வழுப்பட்ட வல்லானும் பதவியிழந்து இகழப்படுவான் என்பதாம். ஏகாரம் தேற்றம்.
கலைஞர் உரை:
அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்
சாலமன் பாப்பையா உரை:
பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் திறம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.
Translation
As in the way one tottering falls, is slip before
The men whose minds are filled with varied lore.
Explanation
(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).