|
||||||||
அகநானூறு-12 |
||||||||
276. மருதம்
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன்
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக்
கடி இலம் புகூஉம் கள்வன் போல,
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு 5
ஆவது ஆக! இனி நாண் உண்டோ?
வருகதில் அம்ம, எம் சேரி சேர!
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண,
தாரும் தானையும் பற்றி, ஆரியர்
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல, 10
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன்
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல்,
பரந்து வெளிப்படாது ஆகி,
வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே! 15
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர்
277. பாலை
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப்
பகல் அழி தோற்றம் போல, பையென
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக,
கடையல்அம் குரல வாள் வரி உழுவை 5
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது,
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர்,
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
பொத்துடை மரத்த புகர் படு நீழல், 10
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின்
வாரா அளவை ஆயிழை! கூர் வாய்
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர்
மனை உறை கோழி மறனுடைச் சேவல் 15
போர் புரி எருத்தம் போலக் கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி,
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
வந்தன்று அம்ம, தானே;
வாரார் தோழி! நம் காதலோரே. 20
தலைமகன் பிரிவின்கண் தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன்
278. குறிஞ்சி
குண கடல் முகந்த கொள்ளை வானம்
பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத்
தோல் நிரைத்தனைய ஆகி, வலன் ஏர்பு,
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி,
உரும் உரறு அதிர் குரல் தலைஇ, பானாள், 5
பெரு மலை மீமிசை முற்றினஆயின்,
வாள் இலங்கு அருவி தாஅய், நாளை,
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி
வருவதுமாதோ, வண் பரி உந்தி,
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை; 10
பனி பொரு மழைக் கண் சிவப்ப, பானாள்
முனி படர் அகல மூழ்குவம்கொல்லோ
மணி மருள் மேனி ஆய்நலம் தொலைய,
தணிவு அருந் துயரம் செய்தோன்
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே? 15
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. - கபிலர்
279. பாலை
'நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும்,
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ,
ஒரு பதி வாழ்தல் ஆற்றுபதில்ல
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென் முலை முற்றம் கடவாதோர்' என, 5
நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
ஆள்வினை மாரியின் அவியா, நாளும்
கடறு உழந்து இவணம் ஆக, படர் உழந்து
யாங்கு ஆகுவள்கொல் தானே தீம் தொடை 10
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலி பூம் பொங்கர் மகிழ் குரற் குயிலொடு
புணர் துயில் எடுப்பும் புனல் தௌ காலையும்
நம்முடை மதுகையள் ஆகி, அணி நடை
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி, 15
கையறு நெஞ்சினள், அடைதரும்
மை ஈர் ஓதி மாஅயோளே?
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்
280. நெய்தல்
பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்
பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,
திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும், 5
பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,
நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு
இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,
பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,
படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின், 10
தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்
கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்
தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்
கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பட்டுப் போகாநின்றவன் சொல்லியதூஉம் ஆம், - அம்மூவனார்
281. பாலை
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்,
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி,
வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை 5
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து, 10
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
அறை இறந்து, அவரோ சென்றனர்
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
282. குறிஞ்சி
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய,
செறி மடை அம்பின், வல் வில், கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு,
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன்,
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப, 5
வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு,
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு,
சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார்
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு 10
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்;
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி,
யாயும், 'அவனே' என்னும்; யாமும், 15
'வல்லே வருக, வரைந்த நாள்!' என,
நல் இறை மெல் விரல் கூப்பி,
இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே!
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - தொல் கபிலன்
283. பாலை
நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்,
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி,
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் 5
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப்
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும்,
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
அரிய ஆகும் என்னாமை, கரி மரம்
கண் அகை இளங் குழை கால்முதல் கவினி, 10
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க,
பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென,
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து,
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப, 15
இனிய ஆகுக தணிந்தே
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே.
உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
284. முல்லை
சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல்
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு,
குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி,
இன் துயில் எழுந்து, துணையொடு போகி, 5
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி,
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர்,
விசைத்த வில்லர், வேட்டம் போகி,
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும் 10
காமர் புறவினதுவே காமம்
நம்மினும் தான் தலைமயங்கிய
அம் மா அரிவை உறைவு இன் ஊரே.
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - இடைக்காடனார்
285. பாலை
'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம்
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர்,
காடு தேர் மடப் பிணை அலற, கலையின் 5
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி
இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி, 10
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே, காதலர்;
வாராய் தோழி! முயங்குகம், பலவே. 15
உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
286. மருதம்
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை,
வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க;
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ,
காஞ்சி நீழல், தமர் வளம் பாடி,
ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த 5
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர!
விழையா உள்ளம் விழையும் ஆயினும்,
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு,
அறனும் பொருளும் வழாமை நாடி, 10
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன்
பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்;
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால்,
அரிய பெரியோர்த் தெரியுங்காலை,
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன 15
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே?
'வரைந்து எய்துவல்' என்று நீங்கும் தலைமகன், 'தலைமகளை ஆற்றுவித்துக் கொண் டிருத்தல் வேண்டும்' என்று தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. - ஓரம்போகியார்
287. பாலை
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ,
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக,
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை,
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின்
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர் 5
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை,
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை,
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க, 10
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க,
அரம்பு வந்து அலைக்கும் மாலை,
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே.
பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற்கீரத்தனார்
288. குறிஞ்சி
சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின் மலை
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை,
சாரல் வேங்கைப் படு சினைப் புதுப் பூ
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை,
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல், 5
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்!
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்,
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக்
கொடியோர் குறுகும் நெடி இருங் குன்றத்து,
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி 10
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்க்
கயந் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்,
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும்,
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து,
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக் 15
கொந்தொடு உதிர்த்த கதுப்பின்,
அம் தீம் கிளவித் தந்தை காப்பே.
பகற்குறிக்கண் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - விற்றூற்று மூதெயினனார்
289. பாலை
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும்
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்,
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும், 5
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி, 10
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத் தெறிப்ப,
மை அற விரிந்த படை அமை சேக்கை
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ,
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி, 15
'நல்ல கூறு' என நடுங்கி,
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே?
பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்
290. நெய்தல்
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை,
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர்,
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென,
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது, 5
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென,
அம் கண் பெண்ணை அன்புற நரலும்
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன்,
கழி சேர் புன்னை அழி பூங் கானல்,
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் 10
மணவா முன்னும் எவனோ தோழி!
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன்
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை,
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல்
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ, 15
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே?
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. - நக்கீரர்
291. பாலை
வானம் பெயல் வளம் கரப்ப, கானம்
உலறி இலை இலவாக, பல உடன்
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப,
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப்
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப் 5
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல்,
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும்
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த் 10
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப,
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர
உவலை சூடிய தலையர், கவலை
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும்
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர 15
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய்
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று,
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி,
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி,
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம் 20
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப்
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்,
நல் எழில், மழைக் கண், நம் காதலி
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே. 25
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ
292.குறிஞ்சி
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து,
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென் முறிச்
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ,
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி
ஏதில் வேலன் கோதை துயல்வரத் 5
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்;
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம் படர்ந்து,
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள்,
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன் 10
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல்
உடு உறு கணையின் போகி, சாரல்
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ,
பலவின் பழத்துள் தங்கும்
மலை கெழு நாடன் மணவாக்காலே! 15
வெறி அச்சுறீஇ,தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர்
293. பாலை
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை
வலை வலந்தனைய ஆக, பல உடன்
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்,
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி, 5
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி,
மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி,
உகாஅய் மென் சினை உதிர்வன கழியும்
வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே,
செல்ப என்ப தோழி! யாமே, 10
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து,
இன்னா மொழிதும் என்ப;
என் மயங்கினர்கொல், நம் காதலோரே?
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். - காவன்முல்லைப் பூதனார்
294. முல்லை
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி,
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர் வார் கண்ணின் கருவிளை மலர, 5
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச, 10
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்,
'காய் சின வேந்தன் பாசறை நீடி,
நம் நோய் அறியா அறனிலாளர்
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என
ஆனாது எறிதரும் வாடையொடு 15
நோனேன் தோழி! என் தனிமையானே.
பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்
295. பாலை
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப,
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின்,
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை,
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி,
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள் 5
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி,
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும்
கல்லுடை அதர கானம் நீந்தி,
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து 10
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல்
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்,
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து,
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத்
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர், 15
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும்
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும்,
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும்
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண், 20
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின்
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
296. மருதம்
கோதை இணர, குறுங் கால், காஞ்சிப்
போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல்,
அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும்
பெரு நீர் வையை அவளொடு ஆடி, 5
புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின்
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில்
பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும்
பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல் 10
கடும் பகட்டு யானை நெடுந் தேர் செழியன்,
மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல,
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே.
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி சொல்லியது. -மதுரைப் பேராலவாயார்
297. பாலை
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும்,
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி,
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி, 5
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென,
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் 10
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்,
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில்,
எழுதியன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை,
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம் 15
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும்
வெரு வரு கானம், நம்மொடு,
'வருவல்' என்றோள் மகிழ் மட நோக்கே?
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
298. குறிஞ்சி
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு விளங்கி,
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட,
மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ் சினைத் 5
தண் துளி அசைவளி தைவரும் நாட!
கொன்று சினம் தணியாது, வென்று முரண் சாம்பாது,
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது,
பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை
இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின், 10
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி,
தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ,
மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண்
நீ வந்ததனினும், இனிது ஆகின்றே
தூவல் கள்ளின் துனை தேர், எந்தை 15
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள்,
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்,
யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு,
இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர் 20
நீடலர் ஆகி வருவர், வல்லென;
கங்குல் உயவுத் துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே!
இரவுக்குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
299. பாலை
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும்,
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை 5
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு,
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன்
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்,
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்,
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென, 10
வைகு நிலை மதியம் போல, பையென,
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா,
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண்
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப, 15
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி,
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு,
அறல் மருள் கூந்தலின் மறையினள்,' திறல் மாண்டு
திருந்துகமாதோ, நும் செலவு' என வெய்து உயிரா,
பருவரல் எவ்வமொடு அழிந்த 20
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே.
இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகனார் இளங்கீரனார்
300. நெய்தல்
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்,
பறி கொள் கொள்ளையர், மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை,
எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர், 5
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல்
செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி,
'செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை' எனச்
சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து,
தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது, 10
நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப்
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,
சேணின் வருநர் போலப் பேணா,
இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின்,
வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ, 15
'துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்
ஓதம் மல்கலின், மாறு ஆயினவே;
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்' என,
எமர் குறை கூறத் தங்கி, ஏமுற,
இளையரும் புரவியும் இன்புற, நீயும் 20
இல் உறை நல் விருந்து அயர்தல்
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே.
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார் மணி மிடை பவளம் முற்றும்நித்திலக் கோவை
276. மருதம் |
||||||||
by Swathi on 29 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|