|
||||||||
அகநானூறு-16 |
||||||||
376. மருதம்
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன்
கல்லா யானை கடி புனல் கற்றென,
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை,
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, 5
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தௌர்ப்ப,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, 10
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ!
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின்
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின்
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி,
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய, 15
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக்
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே!
காதற்பரத்தை புலந்து சொல்லியது. - பரணர்
377. பாலை
கோடை நீடலின், வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு, நெறி பட மறுகி,
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த
வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர்
பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர, 5
கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து,
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி,
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
வரி நிறச் சிதலை அரித்தலின், புல்லென்று,
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் 10
இன்னா ஒரு சிறைத் தங்கி, இன் நகைச்
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி,
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
நசை தர வந்தோர் இரந்தவை
இசை படப் பெய்தல் ஆற்றுவோரே! 15
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்
378. குறிஞ்சி
'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்,
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள,
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர,
காமர் பீலி ஆய் மயில் தோகை 5
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக்
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல
ஆடு கள வயிரின் இனிய ஆலி,
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து,
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் 10
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும்,
உடன்ற அன்னை அமரா நோக்கமும்,
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச்
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு
குட கடல் சேரும் படர் கூர் மாலையும், 15
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி,
யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி!
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர்
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு
அள் இலைப் பலவின் கனி கவர் கைய 20
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து,
பாடு இன் அருவி சூடி,
வான் தோய் சிமையம் தோன்றலானே.
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -காவட்டனார்
379. பாலை
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய,
தெருளாமையின் தீதொடு கெழீஇ,
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து,
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே!
நினையினைஆயின், எனவ கேண்மதி! 5
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை,
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி,
நனவின் இயன்றதுஆயினும், கங்குல்
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால்,
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி, 10
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப,
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு,
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி,
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின் 15
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின்
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி,
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு,
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல், 20
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள்
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர,
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று,
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப்
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த 25
நிரம்பா நீள் இடைத் தூங்கி,
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே?
முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
380. நெய்தல்
தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, 'நும்
ஊர் யாது?' என்ன, நணி நணி ஒதுங்கி,
முன் நாள் போகிய துறைவன், நெருநை,
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த
கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன், 5
தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம்
அலவற் காட்டி, 'நற்பாற்று இது' என,
நினைந்த நெஞ்சமொடு, நெடிது பெயர்ந்தோனே;
உதுக் காண் தோன்றும், தேரே இன்றும்;
நாம் எதிர் கொள்ளாம்ஆயின், தான் அது 10
துணிகுவன் போலாம்; நாணு மிக உடையன்;
வெண் மணல் நெடுங் கோட்டு மறைகோ?
அம்ம, தோழி! கூறுமதி நீயே.
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மதுரை மருதன் இளநாகனார்
381. பாலை
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும்
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் 5
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி, 10
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
முனை அரண் கடந்த வினை வல் தானை,
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய 15
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல,
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து,
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண,
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன் 20
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே!
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை இளங்கௌசிகனார்
382. குறிஞ்சி
'பிறர் உறு விழுமம் பிறரும் நோப;
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்;
கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி,
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம்
காடு கெழு நெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப, 5
அணங்கு அயர் வியன் களம் பொலிய, பையத்
தூங்குதல் புரிந்தனர், நமர்' என, ஆங்கு அவற்கு
அறியக் கூறல் வேண்டும் தோழி!
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி
செழுங் கோட் பலவின் பழம் புணையாக, 10
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும்
வறன் உறல் அறியாச் சோலை,
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே!
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - கபிலர்
383. பாலை
தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள்,
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ,
காடும் கானமும் அவனொடு துணிந்து,
நாடும் தேயமும் நனி பல இறந்த
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என, 5
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும்,
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த
அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய,
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக்
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு, 10
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி,
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும்,
ஆர நீர் ஊட்டிப் புரப்போர்
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே!
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்
384. முல்லை
'இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென,
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய்,
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில், 5
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்,
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ,
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே;
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ? 10
உரைமதி வாழியோ, வலவ!' என, தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி,
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை;
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே.
வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, உழையர் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தியார்
385. பாலை
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல்
என் ஓரன்ன தாயரும், காண,
கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர்
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர, 5
நல் மாண் விழவில் தகரம் மண்ணி,
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன்,
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ, 10
வளையுடை முன்கை அளைஇ, கிளைய
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல்
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும்,
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி, 15
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
386. மருதம்
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள் இரை தேரும் ஊர!
நாணினென், பெரும! யானே பாணன்
மல் அடு மார்பின் வலி உற வருந்தி,
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் 5
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க்
கணையன் நாணியாங்கு மறையினள்
மெல்ல வந்து, நல்ல கூறி,
'மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின் 10
சேரியேனே; அயல் இலாட்டியேன்;
நுங்கை ஆகுவென் நினக்கு' என, தன் கைத்
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர,
நுதலும் கூந்தலும் நீவி,
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே. 15
தோழி வாயில் மறுத்தது; தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர்
387. பாலை
திருந்துஇழை நெகிழ்ந்து, பெருந் தோள் சாஅய்,
அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர்!
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ
பூக் கண் பறைந்த புன் தலைச் சிறாஅரொடு
அவ் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப் 5
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
பூந் துகில் இமைக்கும், பொலன் காழ் அல்குல்,
அவ் வரி சிதைய நோக்கி, வெவ் வினைப்
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ,
வரிப் புற இதலின் மணிக் கட் பேடை 10
நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முட்
செங் கால், சேவல் பயிரும் ஆங்கண்,
வில் ஈண்டு அருஞ் சமம் ததைய நூறி,
நல் இசை நிறுத்த நாணுடை மறவர்
நிரை நிலை நடுகல் பொருந்தி, இமையாது, 15
இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி
சிறிய தெற்றுவதுஆயின், 'பெரிய
ஓடை யானை உயர்ந்தோர்ஆயினும்,
நின்றாங்குப் பெயரும் கானம்
சென்றோர்மன்' என இருக்கிற்போர்க்கே. 20
தலைமகளது குறிப்பு அறிந்து, தோழி தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
388. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின்,
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல்
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி, 5
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து,
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி
இன் இசை ஓரா இருந்தனமாக,
'மை ஈர் ஓதி மட நல்லீரே! 10
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து,
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என,
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட,
சொல்லிக் கழிந்த வல் விற் காளை 15
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து,
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்,
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என,
அன்னை தந்த முது வாய் வேலன்,
'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்; 20
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின்,
வினவின் எவனோ மற்றே 'கனல் சின
மையல் வேழ மெய் உளம்போக,
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
காட்டு மான் அடி வழி ஒற்றி, 25
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே?
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார்
389. பாலை
அறியாய் வாழி, தோழி! நெறி குரல்
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து,
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்,
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும், 5
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்,
எற் புறந்தந்து, நிற் பாராட்டி,
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார்,
மனைவயின் இருப்பவர்மன்னே துனைதந்து, 10
இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர்
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட,
நல் இசை தம் வயின் நிறுமார், வல் வேல் 15
வான வரம்பன் நல் நாட்டு உம்பர்,
வேனில் நீடிய வெங் கடற்று அடை முதல்,
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற,
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
பெருங் களிறு தொலைச்சிய இருங் கேழ் ஏற்றை 20
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி,
வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப,
படு மழை உருமின் முழங்கும்
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரனார்
390. நெய்தல்
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி,
அதர் படு பூழிய சேண் புலம் படரும்
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக்
கண நிரை வாழ்க்கைதான் நன்றுகொல்லோ?
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள, 5
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி,
' ''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
கொள்ளீரோ'' எனச் சேரிதொறும் நுவலும்,
அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின் 10
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்' என,
சிறிய விலங்கினமாக, பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி,
'யாரீரோ, எம் விலங்கியீஇர்?' என,
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற 15
சில் நிரை வால் வளைப் பொலிந்த
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே!
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - அம்மூவனார்
391. பாலை
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண் கொடி அதிரல்
மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர்
விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர்
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி, 5
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என்
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப்
பழ அணி உள்ளப்படுமால் தோழி!
இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி
படாஅவாகும், எம் கண்ணே கடாஅ 10
வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன்
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை
குன்று புகு பாம்பின் தோன்றும்,
என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே!
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார்
392. குறிஞ்சி
தாழ் பெருந் தடக் கை தலைஇய, கானத்து,
வீழ் பிடி கெடுத்த, வெண் கோட்டு யானை
உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன,
பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ,
பின்னிலை முனியானாகி, 'நன்றும், 5
தாது செய் பாவை அன்ன தையல்,
மாதர் மெல் இயல், மட நல்லோள்வயின்
தீது இன்றாக, நீ புணை புகுக!' என
என்னும் தண்டும்ஆயின், மற்று அவன்
அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே 10
ஒல் இனி, வாழி, தோழி! கல்லெனக்
கண மழை பொழிந்த கான் படி இரவில்,
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட,
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த
வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென, 15
மறப் புலி உரற, வாரணம் கதற,
நனவுறு கட்சியின் நல் மயில் ஆல,
மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன்
பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று,
உரிதுஅல் பண்பின் பிரியுனன்ஆயின், 20
வினை தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன்
முனைகொல் தானையொடு முன் வந்து இறுப்ப,
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை
ஆற்றாமையின், பிடித்த வேல் வலித்
தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற, 25
விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின்
கான் அமர் நன்னன் போல,
யான் ஆகுவல், நின் நலம் தருவேனே.
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மோசிகீரனார்
393. பாலை
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி,
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய,
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக்
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி, 5
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ,
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர்
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப,
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் 10
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி,
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை,
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா,
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி,
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின், 15
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்,
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும்
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர்,
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர் 20
நீடலர் வாழி, தோழி! தோடு கொள்
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப,
தகரம் மண்ணிய தண் நறு முச்சி,
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ்
வேனில் அதிரல் வேய்ந்த நின் 25
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்
394. முல்லை
களவும் புளித்தன; விளவும் பழுநின;
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு 5
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்த, பின்றை, நீயும்
இடு முள் வேலி முடக் கால் பந்தர்,
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில்,
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர, 10
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள்,
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல்
மன்ற இரும் புதல் ஒளிக்கும் 15
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே.
இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார்
395. பாலை
தண் கயம் பயந்த வண் காற் குவளை
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன,
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண்
பனி வார் எவ்வம் தீர, இனி வரின்,
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர் 5
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்,
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை,
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி,
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு, 10
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல்
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்,
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து,
ஆடு கழை இரு வெதிர் நரலும்
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே! 15
பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
396. மருதம்
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித் தேர்ப்
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென,
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்,
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி, 5
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது;
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி,
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து,
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின்
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே; 10
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி,
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய,
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ,
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின்
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ, 15
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத்
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து,
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே!
காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது. - பரணர்
397. பாலை
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட,
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப,
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
மணன் இடையாகக் கொள்ளான், 'கல் பகக்
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் 5
எளியவாக, ஏந்து கொடி பரந்த
பொறி வரி அல்குல் மாஅயோட்கு' எனத்
தணிந்த பருவம் செல்லான், படர்தரத்
துணிந்தோன்மன்ற துனை வெங் காளை
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி, 10
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப்
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து,
கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும்
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங் கோட்டுக்
கோடை வெவ் வளிக்கு உலமரும் 15
புல் இலை வெதிர நெல் விளை காடே.
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
398. குறிஞ்சி
'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர,
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய
பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து, 5
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்,
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று,
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க,
நன்று புறமாறி அகறல், யாழ நின்
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ? 10
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி,
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப்
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி,
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி,
நயன் அறத் துறத்தல் வல்லியோரே, 15
நொதுமலாளர்; அது கண்ணோடாது,
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,
மாரி புறந்தர நந்தி, ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண் 20
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே! 25
காமம் மிக்க கழி படர் கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து, சொல்லியது. -இம்மென்கீரனார்
399. பாலை
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி,
இமையக் கானம் நாறும் கூந்தல்,
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம்
பருகுவன்ன காதல் உள்ளமொடு,
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார் 5
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட,
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி,
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ, 10
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தௌ விளி,
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப்
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி,
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், 15
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்,
வேய் கண் உடைந்த சிமைய,
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
400. நெய்தல்
நகை நன்று அம்ம தானே 'அவனொடு,
மனை இறந்து அல்கினும் அலர், என நயந்து,
கானல் அல்கிய நம் களவு அகல,
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை,
நூல் அமை பிறப்பின், நீல உத்தி, 5
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி,
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை
நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந் தினைக்
குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, நல் நான்கு
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ, 10
பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி,
மதியுடை வலவன் ஏவலின், இகு துறைப்
புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர்க்
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி,
பால் கண்டன்ன ஊதை வெண் மணல், 15
கால் கண்டன்ன வழி படப் போகி,
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்,
இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி, துறை கெழு
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை,
பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு, 20
நேமி தந்த நெடுநீர் நெய்தல்
விளையா இளங் கள் நாற, பலவுடன்
பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும்
புதுவது ஆகின்று அம்ம பழ விறல்,
பாடு எழுந்து இரங்கு முந்நீர், 25
நீடு இரும் பெண்ணை, நம் அழுங்கல் ஊரே!
தலைமகன் வரைந்து எய்திய பின்றை, தோழி தலைமகட்குச் சொல்லியது. -உலோச்சனார்
அகநானூறு முற்றிற்று.
376. மருதம் |
||||||||
by Swathi on 29 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|