இந்தியாவில் 16.9 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்று மத்தியச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்தியச் சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுபிரியா பட்டேல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "கடந்த 2019-20-ம் ஆண்டில் இந்தியாவில் 13.8 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2023-24 ஆண்டில் 16.9 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 8.7 லட்சம் பேர் ஆண்கள், 8 லட்சம் பேர் பெண்கள், 6,637 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்" என்று தெரிவித்து உள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்திய இயக்குநர் சைமா வாசத் இதுகுறித்து கூறும்போது,”தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுமார் 80,000-க்கும் மேற்பட்ட சிறார்கள் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். சிறார்களைப் பாதுகாக்க உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று தெரிவித்தார்.
|