அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்)
மணக்குடவர் உரை:
தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம்.
இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அகழ்வாரைத் தாங்கு நிலம்போல - தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலம்போல;தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை - தம்மை மதியாது தீங்கு செய்தாரைப் பொறுத்தல் தலையாய அறமாம்.
இகழ்தல் புகழ்தலுக்கு எதிர். அது இங்கு மதியாது சொல்லும் சொல்லை மட்டுமன்றிச் செய்யுஞ் செயலையுங் குறித்தது.
கலைஞர் உரை:
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை
இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே
தலைசிறந்த பண்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.
Translation
As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.
Explanation
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.