|
|||||
சி.பி.ஐ கேட்ட கூடுதல் அதிகாரங்களை தர மத்திய அரசு மறுப்பு ! |
|||||
சி.பி.ஐ அமைப்பிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் விவகாரத்தில், அந்த அமைப்பு கேட்ட கூடுதல் அதிகாரங்களை தர மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ அமைப்பிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனை அடுத்து, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் சி.பி.ஐ.க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய, சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை மத்திய அரசு சார்பில், உச்ச நீதி மன்றத்தில் 41 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்திரமாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த பிரமான பத்திரத்தின் படி, சி.பி.ஐ.க்கு கூடுதல் நிதி அதிகாரம் வழங்கப்படும், சி.பி.ஐ. நடத்துகிற விசாரணைகளை ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு கண்காணிக்கும், சி.பி.ஐ.யின் இயக்குனர் ஒரு குழு மூலம் தேர்வு செய்யப்படுவார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய அரசின் பிரமான பத்திரத்திற்கு, பதில் அளித்து சி.பி.ஐ சுப்ரீம் கோர்ட்டில் பதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. 14 பக்கங்களை கொண்ட அந்த பிரமாண பத்திரத்தில், சி.பி.ஐ.க்கு தன்னாட்சி வழங்குவதற்காக கூறப்பட்டுள்ள திட்டங்களை விட மேலும் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும், சி.பி.ஐ. இயக்குனர் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக உயர்த்தப்பட வேண்டும் எனவும், சி.பி.ஐ. இயக்குனருக்கு மத்திய அரசு துறை செயலாளர் பதவிக்குரிய அலுவல் சாரா அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்; சி.பி.ஐ. மீதான புகார்களை விசாரிக்க பொறுப்புறுதி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவு ஏற்புடையது அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.சி.பி.ஐ.யின் இந்த பிரமாண பத்திரம் தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் படி மத்திய அரசு நேற்று தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில் மத்திய அரசு கூறியிருப்பதாவது,
சி.பி.ஐ. இயக்குனர் பதவி இரண்டு ஆண்டு காலம் என்பது சரியானதே. பதவிக்காலத்தை உயர்த்தும் பட்சத்தில் சி.பி.ஐ. அமைப்பின் தொலைநோக்கிற்கு முட்டுக்கட்டையாக அது அமையும்.
சி.பி.ஐ. மீதான புகார்களை விசாரிக்க பொறுப்புறுதி ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவு தவிர்க்க இயலாத ஒன்றாகும். பொறுப்புறுதி இன்றி அதிகாரம் என்பது மிகவும் ஆபத்தானது.
மூத்த அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ள அனுமதி தர ஊழல் கண்காணிப்பு ஆணையர் தலைமையிலான சுதந்திரமான குழு அமைக்க வேண்டும் என்ற சி.பி.ஐ. கோரிக்கை ஏற்புடையது அல்ல.
சி.பி.ஐ. இயக்குனரிடம் குரூப் ஏ அதிகாரிகள் மீதான முழுமையான ஒழுங்கு நடவடிக்கை அதிகாரத்தை விட்டு விட முடியாது. இது சட்டவிரோதமானது.
அனைத்து வலிமையும் கொண்ட சி.பி.ஐ. இயக்குனருக்கு கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் அவரது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிற அபாயம் உள்ளது. |
|||||
by Swathi on 03 Aug 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|