திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். (தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.
தேவநேயப் பாவாணர் உரை:
நல்லவை நாடி இனிய சொலின் - விளைவாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை ஆராய்ந்தறிந்து அவற்றைச் செவிக்கினிதாக ஒருவன் சொல்வானாயின் ; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குத் தீவினைப் பயன் குன்ற நல்வினைப் பயன் வளரும் .
அறம் நல்வினை ; இங்கு அதன் பயனைக் குறித்தது . அறமல்லாதவை தீவினைகள் . தீவினைகள் தேய்தலாவது தீவினைப் பயன் குன்றல் . நல்வினையும் தீவினையும் ஒளியும் இருளும் போல மறுதலைப் பொருள்களாதலின் , ஒளியின் முன் இருள் கெடுதல் போல நல்வினைப் பயன் முன் தீவினைப் பயன் கெடுமென்றார் . நல்லவற்றைச் சொன்னாலும் அறமாகுமேனும் , அவற்றைக் கடுமையாகச் சொல்லின் கேட்பார் மனம் வருந்தி அவ்வறங் கெடுதலால் , நல்லவற்றையும் இனிதாகச் சொன்னாலன்றி அறமாகாதென்றார் . இதனால் இன்சொல்லின் அறத்தன்மை வலியுறுத்தப் பெற்றது .
கலைஞர் உரை:
தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால்,
இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
Translation
Who seeks out good, words from his lips of sweetness flow;
In him the power of vice declines, and virtues grow.
Explanation
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.