புனைப்பெயர்: ஜேபி (JB)
பிறந்த ஊர் : திருச்சி
வசிக்கும் ஊர்:ஃப்ளோரிடா, அமெரிக்கா.,
பணி / தொழில்: IT
எழுதிய நூல்கள்:
1. காதலா? கர்வமா?: பதிப்பகத்தார் - SMS Publications , மறு பதிப்பு- JLine Publications, வெளியிடப்பட்ட வருடம்- மே 2018
நகரத்தின் மாசு தீண்டா அழகிய கிராமத்துப் பைங்கிளியின் விழியில் சிக்குண்டு அடிபணிந்த கர்வமிகு சிங்கத்தின் காதல் கதை இது. தன் தாய்தனை புற்றுநோய் என்னும் கொடுமைக்கு வாரிக் கொடுத்து, மது என்ற அரக்கனுக்கு தந்தையும் அடிமையாக, நரக வாழ்விலிருந்து நகர வாழ்க்கைக்குத் தாய்மாமனுடன் நகரும் அரிவையவள். நாட்டையே தன் கொடைக்கீழ் ஆளும் அரசனைப் போன்று கல்லூரியை தன் விழியசைவில் ஆட்சி செய்யும் முடிசூடா அரசனாக, பேரழகு பேதையாயிருந்தாலும் எனக்குத் துச்சமெனச் சிலிர்த்து நிற்கும் அரிமாவின் வாழ்வில், கல்லூரி வாசல் வழி நுழைகிறாள் பெண்ணவள் கண்டதும் காதலில் மயங்கும் மன்னவன். கர்வமிகு காளை கண்டு மருளும் மான் இவளின் மனதினை வருடியே திருடுகிறான். காதலில் திளைத்த ஜோடிக்குக் காலனாய் வந்தது காதலனின் ‘நான்’ என்ற கர்வம். அகந்தையின் காலடியில் அடிமையானவன்,
காரிகையின் மனம் உணராமல் பிரிகிறான். அவளின்றி அணுவும் அசையாது என்று தேடி வர, அவளோ அவனுக்கு மட்டுமே என்ற தன் வாழ்வில் கறையான்களாய் கயவர்கள் அழிக்க வழி தராமல், காலனைத் தேடிச் செல்கிறாள். ஆண் சாவித்திரியென மங்கையவளை இறப்பிலிருந்து காத்து, எமனுக்கும் என்னவளை தரமாட்டேன் என்று முரட்டுக் குழந்தையென எமனை முந்தி அவளைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். புண்பட்ட மனதுடயவளை அதிரடியாய் மணந்து, வலிமறக்க நேரம் தந்து மருந்தாய் தனை தருகிறான். இதயத்தில் உதிரத்தைக் கசியச் செய்தவனே மருந்தாய் மாறியதில் மங்கையவளின் வலி மறைந்ததா? கர்வத்தினுள் வருடங்கள் பல அடங்கியிருந்த காதல் ஆர்ப்பாட்டமாக வெளி வந்ததா? கர்வத்தின் காதல் தன்னவளின் காதலுடன் மீண்டும் இணைந்ததா? கர்வத்திற்கும் காதலிற்கும் இடையே நடந்து வந்த ஆக்ரோஷமான போரில், வென்றது காதலா? கர்வமா?
2. மலரினும் மெல்லியவள்!: (தொகுதிகள் – 2) 14 பிப்ரவரி 2020 www.Magazine.ValaiTamil.com பதிப்பகத்தார் - Notion Press, விநியோகம்- SMS Publications, வெளியிடப்பட்ட வருடம்- ஆகஸ்ட் 2018
ஆளுமை, அகங்காரம், கோபம், ஆக்ரோஷம், உயர்வு மனப்பான்மை என்ற குணங்கள் கொண்ட இளம் தொழிலதிபர் ஒருவன் விதி வசத்தால் அமைதியான, ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் ஒரு கிராமத்துப் பெண்ணைத் திருமணம் என்ற பந்தத்தில் தன்னோடு இணைத்து, வாழ்க்கையின் பாதையைச் சமபங்காகப் பகிர்ந்து வாழ நேர்ந்தால்? கனவிலும் நினையாத காதல் என்ற அழகான நுண்ணுணர்வால் ஈர்க்கப்பட்டு மனைவிக்காக உருகத் துவங்கியவனின் ஆழ் மனதில் அரும்பியிருந்தகாதலைவெளிப்படுத்த இயலாது தவித்தவன், தன் மலரினும் மெல்லிய மனையாளிடம் தன் இதயத்தைத் திறந்தானா? விதி தங்களின் மணவாழ்க்கையைச் சூறாவளி போல் சுழற்றியடித்தாலும், காதலில் திளைத்த இரு உள்ளங்களும் காதலையே மருந்தாக மாற்றி, ஆழ் கடலின் அமைதி போல் தங்களின் வாழ்க்கையைச் செம்மையாக்க, விதி மீண்டும் தன் கோரக் கரங்களைக் கொண்டு அந்நியன் ஒருவனால், அழகிய இல்லறத்திற்குள் தங்களது முதல் காலடியை எடுத்து வைத்திருக்கும் தம்பதியினரின் வாழ்க்கைப் பாதையைச் சிதைக்க நினைத்தால்? ஆக்ரோஷமும், ஆவேசமும், சீற்றமும் ஒருங்கிணைந்த இளம் கணவனின் இருத்ரதாண்டவத்தில் கேடு நினைத்தவனின் தலை எழுத்து மாற்றி எழுதப்படுமா? எத்தகைய இரும்பு மனிதனின் இதயத்தையும் ஊடுருவிச் செல்லும் வலிமை வாய்ந்த காதலை அடிப்படையாகக் கொண்ட தன் வாழ்க்கையை அவன் காப்பாற்றுவானா?
3. கணவனே கண்கண்ட எதிரி! (தொகுதிகள் - 2) பதிப்பகத்தார் - JLine Publications வெளியிடப்பட்ட வருடம்- 2019
குறும்புத்தனமும் துடுக்குத்தனமுமே நான் என்று வலம் வரும் நமது துறுதுறு நாயகனின் காளைப் பருவத்தில், புயலாய்ப் பிரவேசிக்கும் மங்கையவளின் கதை இது.. எதிரும் புதிருமான சந்திப்புக்கள் மோதலாய்
உருவாகி இனி சந்தித்துக் கொள்ளாதிருப்பதே நலமென்னும் நிலையில், எழுதிச்செல்லும் எனது கைகள் மாறுமோ என்பது போல் திருமணப் பந்தத்தில் இணைத்து வைத்து தன் விளையாட்டைத் துவங்குகிறது விதி.. கணவனாய் கை கோர்த்திருப்பவனின் அன்பு அல்லாது வெறுப்பை மட்டுமே சுமந்திருக்கும் இதயத்தில், மெல்லியலாளின் காதல் தென்றலாய் வருடத் துவங்கும் நேரம், தெய்வமாகத் தொழப்பட வேண்டிய கணவன் எதிரியாய் உருமாறியது ஏனோ? நல்லறமாக வேண்டிய இல்லறம் அடங்காத காழ்ப்புணர்ச்சியையும் தீராத வெறுப்பையும் மட்டுமே பாரமாய்ச் சுமந்திருக்கும் கணவனின் இதயத்தினால் மாயையாய் மாறிப் போனதோ? தெய்வமாக இருக்க வேண்டிய கணவன் எதிரியாக மாறிப் போனதில் வதைபட்டவளின் மெல்லிய இதயத்தில் அரும்பிய காதல், அகங்காரம், சீற்றம் என்ற கட்டுக்களைத் தனக்குள் இட்டிருந்த கணவனின் இதயத்தை வென்றதா? காலனாய் ஊடுருவிய கயவனிடம் இருந்து தீயதில் தங்களின் வாழ்வு சுழன்று சிக்காமல், சொர்க்கமாய்த் தன்னவளை மீட்டெடுத்தானா எதிரியாய்ப் போன அவளது மணாளன்? ‘கணவனே கண்கண்ட எதிரி!’ கவிதையாய்ச் சொல்லும் இவர்களின் காதலை!
4. குருக்ஷேத்திரம்! (தொகுதிகள் - 4) பதிப்பகத்தார் - JLine Publications வெளியிடப்பட்ட வருடம்- 2019
தொழில் என்ற உலகத்தினுள் வேகத்திற்கு ஒருவன், விவேகத்திற்கு மற்றொருவன் என்று ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் இரட்டைச் சகோதரர்களை, ஆளுமை, அபார அறிவாற்றல், ஆக்ரோஷம் என்ற குணங்கள் கொண்ட, விவேகத்தையும் வேகத்தையும் ஒருங்கே கலந்து பிறந்திருக்கும் ஒருவன் பகைவர்களாக எண்ணித் தொழில் போர் புரிய நேர்ந்தால்? மறைமுகத் தொழில் யுத்தத் தந்திரங்களாலும், அபாயகரமான வியூகங்களாலும் தங்கள் எதிரியைக் குறி தவறாது அடித்து வீழ்த்தி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் வேளையில், தொழில் பகை குடும்பப் பகையாய் மாறி இரு குடும்பத்தின் இளம்பெண்களையும் பகடையாக்கியதில் விளையும் விபரீத தருணங்களின் கோர்வையே இந்தக் கதை..
இவர்களின் மோதலால் உண்டான வெப்பத்தால் தொழில்துறையே தீயாய் தகிக்கத் துவங்க, வெப்பம் தணிக்க வந்த மூன்று தேவதைகளால் மனம் குளிர்ந்து தொழில்துறையில் வெற்றி வாகை சூடி கோலோச்சிய சூரர்கள் மூவரைப் பற்றியதே இந்தக் குருக்ஷேத்திரம். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் ஆன போரில் எவ்வாறு அதர்மத்தை ‘அன்பு’ என்ற அம்பினால் தர்மம் வென்றது என்பதை அழகாக, ஆளுமையாகக் கர்ஜிக்கும் மூன்று சிங்கங்களின் வாழ்வின் வழி கூறும் இந்நூல்.. மஹாபாரதக் குருக்ஷேத்திரத்திற்கும் இந்தக் குருக்ஷேத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் பலமான காரணம், ஆற்றலை வெளிப்படுத்தித் தன்னை நிலைநிறுத்தி ஆட்சி புரிதலே.. இரண்டிலும் பெண்ணின் கண்ணீருக்கு நியாயம் கிட்டியது.. அன்பால் போரிட்டால் தர்மமும் துணை நிற்கும் உன் வெற்றிக்கு என்பதை உணர்த்தும் கதை இந்தக் குருக்ஷேத்திரம்.. 5. உதயேந்திரவர்மன்! (புத்தகங்கள் வெளியீட்டுப் பணியில் உள்ளன) தங்கேதி தேசத்தின் வடக்குப் பகுதியை ஆட்சி புரிந்து வரும் ஷாஸ்ரஸாத் மாயி என்ற கொடுங்கோலனால், தெற்கு தங்கேதியை மட்டும் முழுமையாகத் தனது ஆதிக்கத்திற்குக் கீழ் கொண்டு வர இயலவில்லை.. அதற்குக் காரணம் தங்கேதி தேசத்தின் தெற்குப் பகுதியின் மிகப் பெரிய இராஜ்யமான வர்ம இராஜ்யத்தின் அரியாசனத்தில் வீற்றிருக்கும் மாவீரனான விஜயேந்திர வர்மரின் புதல்வன்.. வீரம், இராஜதந்திரம், அறிவுக்கூர்மை என்று அனைத்திலும் அபரிமிதமான ஆற்றல்
பெற்றவன், வர்ம தேசத்தின் இளவரசன், உதயேந்திர வர்மன். மனித ரூபத்தில் இருக்கும் அசுரன் என்று பெயர் பெற்ற ஷாஸ்ரஸாத் மாயியிடம் இருந்தும், காமத்தையும் நயவஞ்சகத்தினத்தையும் தனது உடல் பொருள் ஆவி என்றனைத்திலும் கலந்திருக்கும் சிம்ம இராஜ்யத்தின் அரசன் விக்கிரம்ம சிம்மனிடம் இருந்தும், தங்கேதி தேசத்தை எவ்வாறு வர்ம இளவரசன் காத்தான் என்பதைக் கூறுவதே, "உதயேந்திரவர்மன்". எவருக்கும் அடிபணியாத, ஒருவருக்கும் தலைவணங்காத, அறிவு, ஆளுமை, செருக்கு என்ற அனைத்திற்கும் மொத்த உருவமும் நானே என்பது போல் வலம் வரும் வர்ம இளவரசனை, யுத்தக்களத்தில் ஆண்மகனின் வீரத்திற்குச் சிறிதும் குறைந்தது அல்ல என் தீரம் என்று பறைசாற்றும் வீரமகளான பேரழகு பதுமையான மகிழ்வதனி எங்கனம் வாட்போரில் மட்டுமல்லாமல், காதல் போரிலும் வீழ்த்துகின்றாள் என்பதைக் காதல் இரசம் சொட்ட விளக்கும் கதை இது. இராஜ தந்திரங்களையும் போர் வியூகங்களையும் ஆக்ரோஷ யுத்த முறைகளையும், அவற்றுடன் இணைத்து காதல் கணைகளையும் வீசும் இளம் இளவரசனின் அதிரடி ஆட்டமே இந்த உதயேந்திரவர்மன்.. எழுதிக் கொண்டிருக்கும் / எழுத நினைக்கும் நூல் / கதைக்களம்: நிலா (லூனா) - சிறு குழந்தைகளின் பாலியல் வன்முறையைப் பற்றிய கருத்துக்களைக் கதையோடு இழைத்துக் கூறு விரும்புகின்றேன்.
புத்தகங்களைப் பெற: https://www.amazon.in/dp/8194271258?ref=myi_title_dp
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்த விவரங்களை, படைப்புகளை வலைத்தமிழில் வெளியிட உங்கள் நூல்கள் குறித்த விவரங்களை Magazine@ValaiTamil.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
|