மழையில் நனைந்து வெயிலில் காய வேண்டும் என்பது காளி வாங்கி வந்த வரம் என்பதால், மேல் கூரை இன்றித் திறந்த வெளியிலேயே கோயில் கொண்டுள்ளாள் காதமறவர் காளி. இங்கே காளியைச் சுற்றிப் பெண்கள் யாரும் பிரகாரம் வலம் வரமாட்டார்கள் என்பது சிறப்பு.பெரிய மறவர் கொண்டு வந்த காளி என்பதால், காதமறவர் காளி என்று அவளுக்குப் பெயர் சூட்டினர்.
காலப்போக்கில் காதம் பெரியாள் என்ற பெயரும் அவளுக்கு ஏற்பட்டது. இப்போது காளிக்கு மண் சிலை மட்டுமே இருக்கிறது. வருடந்தோறும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் காதமறவர் காளிக்குத் திருவிழா கூட்டுகிறார்கள். அப்போது காதமறவர் காளியாக இரண்டு மண் சிலைகளை ஊர்மக்கள் சார்பில் செய்து வந்து கோயிலில் பிரதிஷ்டை பண்ணுகிறார்கள்.
இதைத் தவிர, வேண்டிக் கொண்டவர்களும் நேர்த்திக்கடனாக காளி சிலைகளைச் செய்து வைப்பதுண்டு. அடுத்த வருடத் திருவிழா வரை இந்தச் சிலைகளுக்கு பூஜைகள் நடக்கும். மறு வருடத் திருவிழாவில், பழைய சிலைகளைப் பின்னால் வைத்துவிட்டு, புதிய சிலைகளுக்கு பூஜைகள் நடக்கும். காதமறவர் காளிக்கு, சேலை போடுவதுதான் சிறப்பான காணிக்கை. இப்படி காணிக்கை போடும் சேலைகளை எந்தக் காரணம் கொண்டும் யாருக்கும் விற்பதோ, இனாமாகக் கொடுப்பதோ கிடையாது. |