இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் உலகின் இரண்டாம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மூன்றாம் நிலை வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவுடன் மோதினார். ஆரம்பம் முதலே விறுவிறுப்புடன் நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட் டை-பிரேக் வரை சென்றது. டைபிரேக் முடிவில் முதல் செட்டை 7-6 (12-10) என முர்ரே கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 7-5 எனப் போராடி வென்றார் முர்ரே. மூன்றாவது செட்டையும் கைப்பற்றி முர்ரே ஜெயித்து விடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எழுச்சியுடன் அபாரமாக ஆடிய ஜோகோவிச் மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை முறையே 6-2, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி சமநிலையை எட்டினார். போட்டியின் முடிவை நிர்ணயிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி செட்டில் வீரர்கள் இருவரும் வெற்றிக்காக கடுமையாக போராடினர். எனினும் ஜோகோவிச்சை விட, முர்ரேவின் கை இம்முறை சற்று ஓங்கியிருந்தது. இறுதியில் 6-2 என ஐந்தாவது செட்டை முர்ரே கைப்பற்றினார்.
|