அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சுவான், பகைவனது வலிமை அறியான், மதியிலன், ஈயமாட்டான்: இப்பெற்றிப் பட்டவன் பகைவர்க்கு மிகவும் எளியன். இஃது இவை நான்கு முடையவன் தோற்கு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அஞ்சும்-போருக்கு அஞ்சுபவனாகவும்; அறியான்-அறியவேண்டியவற்றை அறியாதவனாகவும்; ஈகலான்-ஈகைத் தன்மையில்லாதவனாகவும் இருப்பவன்; பகைக்குத் தஞ்சம் எளியன்-தன்பகைவர்க்கு மிக எளியவனாவான். இந்நான்கு நிலைமைகளுள் ஒன்றிருப்பினும் தோல்விக் கேதுவாயிருக்க, நாலும் ஒன்று சேரின் தோல்வியுறுதல் முழுவுறுதியும் மிக எளிதாய் நேர்வதுமாதலின் 'தஞ்சமெளியன்' என்றார். 'தஞ்சம்' எளிமைப் பொருளிடைச்சொல். "தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே." (தொல்,751) 'தஞ்சமெளியன்' மீமிசைச்சொல். எளியனாதல் எளிதாய் வெல்லப்படுதல்.
கலைஞர் உரை:
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.
Translation
A craven thing! knows nought, accords with none, gives nought away;
To wrath of any foe he falls an easy prey.
Explanation
In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.