திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன் மேல் தான் வலியிலன் : ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்? (சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.)
மணக்குடவர் உரை:
சுற்றத்தார்மாட்டு அன்புறுதலும் இலன்; வேற்றரசராகிய வலிய துணையும் இலன்: ஆதலான், தான் வலியிலன்; இப்பெற்றிப்பட்டவன், மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்?.
தேவநேயப் பாவாணர் உரை:
அன்பு இலன் - தன் சுற்றத்தின்மேல் அன்பில்லாதவனாகவும்; ஆன்ற துணை இலன் - சிறந்த துணையில்லதவனாகவும், தான் துவ்வான்-அவற்றோடுதானும் வலிமையில்லாதவனாகவும் உள்ள ஒருவன்; ஏதிலான் துப்பு என்பரியும்- பகைவன் வலிமையை எங்ஙனந் தொலைப்பான்? இம்மூன்று நிலைமையையும் ஒருங்கே யுடையவன் எளிதாய் வெல்லப்படுவான் என்பதாம், ஆனுதல் நிறைதல் அல்லது போதியதாதல், துத்தல் வலியுறுத்தல். ’துப்பு’ தொழிற்பெயரடிப் பண்புப் பெயர்.
கலைஞர் உரை:
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?.
சாலமன் பாப்பையா உரை:
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலிமையை எப்படி அழிக்க முடியும்?.
Translation
No kinsman's love, no strength of friends has he;
How can he bear his foeman's enmity?.
Explanation
How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?.