எந்தக் காரியத்தை எதற்காகச் செய்கிறோம் என்று தெரியாமலேயே பல பேர் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள் . ரெயில் நிலையத்தில் ரெயில் வந்து நின்றதும் பெட்டிகளுக்கு இடையே உள்ள இணைப்பை சுத்தியலால் அடித்து சரி செய்யும்வேலையில் ஒருவர் அமர்த்தப்பட்டார் . அவர் ஓய்வுபெறும் நாள் வந்தது . வழியனுப்பு விழாவும் நடைபெற்றது . அதற்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார் . “ ரெயில் வந்து நின்றதும் இணைப்புகளில் சுத்தியலால் அடிக்கும் வேலையை இவ்வளவு நாளும் தவறாமல் செய்து வந்தேன் . ஆனால் ஒரு விஷயத்தை இன்றைக்கு இங்கு வந்திருக்கிற அதிகாரிகள் தெளிவுபடுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . எதற்காக சுத்தியலால் அடித்தேன் என்று இது வரைக்கும் எனக்குத் தெரியவில்லை , இன்றைக்காவது சொல்லுங்கள் ” என்றார் . அதிகாரிகளில் ஒருவர் சொன்னார் . “ எங்களுக்கும் அது சரியாகத் தெரியவில்லை . மேலிடத்தில் கேட்டுச்சொல்கிறோம் . ”
இப்படிப் பலபேர் இருக்கையில் , காமராசர் தன்னுடைய வாழ்வைத் திட்டமிட்டு அமைத்துக் கொண்டார் . ஆறாம் வகுப்பு வரையே படிக்க முடிந்தது . அதற்குப்பின் தாய்மாமனார் ஜவுளிக்கடையில் வேலை செய்ய வேண்டியதாயிற்று . ஆனாலும் அவரது நாட்டமெல்லாம் அரசியலிலேயே இருந்தது . பத்திரிகைகள் படிப்பதும் , சத்தியமூர்த்தி , திரு . வி . க ., வ . உ . சி . போன்ற தலைவர்களின் உரைகளையும் , எழுத்துக்களையும் ஊன்றிக் கவனிப்பதும் இவரது அன்றாடப் பணிகளாகிவிட்டன . ஞானப்பிள்ளை என்பவர் விருதுபட்டியில் பொடிக்கடை வைத்திருந்தார் . விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் கூடிப்பேசும் இடமாக அது அமைந்தது . ஏதேனும் மறைபொருளை உள்வைத்துப் பேசும்பேச்சை பொடி வைத்துப்பேசுதல் என்பார்கள் . ஆனால் விடுதலைப் போராட்டச்செய்திகளை மறைவாகப் பேசுவதற்குப் பொடிக்கடையே களமாக அமைந்தது பொருத்தம்தான் . ‘ ஞானப்பிள்ளைக் கூட்டம் ’ என்றே அந்தக் குழுவுக்குப் பெயர் வந்துவிட்டது . காமராசரும் அந்தக் குழுவில் ஒருவரானார் . அரசியல் ஈடுபாடு அதிகமாயிற்று . அவரது வீட்டில் இதைக்கண்டு அஞ்சினார்கள் . அவரை விருதுபட்டியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள் . அதன்படி திருவனந்தபுரத்திலிருக்கும் தாய்மாமன் கடைக்கு அனுப்பி வைத்தனர் . தாய்மாமனின் கண்காணிப்பு அதிகமாயிருந்தது . அதனால் விருதுபட்டி நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்களை அஞ்சலகத்துக்கே சென்று வாங்கி மறைத்து வைத்தே படிப்பார் . ஆனால் இந்த ஏற்பாட்டையும் தாண்டி ஒரு நாள் ஒரு கடிதம் மாமனின் கையில் சிக்கி விட்டது . அவ்வளவுதான் , மறு வண்டியிலேயே அவர் விருதுபட்டிக்கு அனுப்பப்பட்டார் . அங்கு வந்ததும் காமராசரின் அரசியல் ஈடுபாடு அதிகமாயிற்று . குடும்பத்தினர் பயந்தனர் . பேரனுக்கு வெள்ளைக்காரர்களால் ஆபத்து வருமோ என்று பாட்டியார் நடுங்கினார் . ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் காமராசர் தமது கடமையில் ஈடுபட்டார் .
வாய்ப்பினால் உருவானவன் அல்ல மனிதன் . வாய்ப்பை உருவாக்குபவனே மனிதன் . ஒவ்வொரு நாளையும் உன்னதமான நாளாக எண்ணி உழைத்தால் உலகம் நம் கையில் . கடமையை உணர்ந்தவர்களுக்குக் காலம் வசப்படும் . வெற்றி நிசப்படும் .