LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்...

(பொதுவாழ்வு ஒரு பொன்னாடு)

"பொதுப் பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை பணப் பெட்டியை நிரப்பும் வழியாக உபபோகிப்பவன், மக்களால் வெறுக்கப்படுவான். அவன் எவ்வளவு அருமையான கொள்கைகளை கூறினாலும் அது செம்பாகுமே தவிர பொன்னாக மதிக்கப்படமாட்டாது."
--------
பொது வாழ்வு புனிதமானது, உண்மையோடு விளங்கும் உயர் பண்புதான் அதற்கு அடித்தளமானது. ஆனால் அரசியல் இயக்கம் பொதுப் பணி உணர்வோடு கூடிய கூட்டமாக அமையாவிடில், பதவியைப் பெறும் வாயிலென்றும், உடமையாளன் தன் உடமையைக் காக்கும் பீடம் என்று கருதும் மனப்போக்கு உருவாகிவிடும்.
--------

(குடியாட்சி கோமான் - 14.01.1965)

”வெற்றி - எப்படியும் வெற்றி எதை செய்தாகிலும் வெற்றி - என்று மட்டும் கருதுபவர்கள், எதிர்த்து நிற்பதைவிட இணைந்து பலன் பெறலாம் என்கின்றனர். அதிலே அவர்கள் வெற்றியும் காண்கின்றனர். ஆனால் அந்த வெற்றி அவர்களுக்குச் சுவைதரும். சமூகத்திற்கு பலன் கிடைத்திடாது. கழகம் மேற்கொண்டுள்ள பணி சமூகத்திற்கு, குடியாட்சி நெறிக்கு வெற்றியைத் தேடித் தரும் பெரும் முயற்சியாகும்.”
--------

(சிதம்பரம் கூட்டம் - உருவாகும் வரலாறு - 25.08.1957)

"திராவிடப் பெருங்குடி மக்களே! உங்களுக்கு நான் பெருமையுடன் சொல்லிக்கொள்வேன். நாம் போட்டிருக்கிற இந்த அடித்தளம் சாமானியமானதல்ல, காலத்தாலே கிள்ளி எறியப்படக்கூடியதுமல்ல, காதகர்கள் எவ்வளவு பெரிய கல் நெஞ்சத்தை கடப்பாறையாக்கி அவர்கள் கல்லினாலும், போடப்பட்டிருக்கும் இந்த அடித்தளத்தை அவர்களாலே கிள்ளி எறியமுடியாது. அந்த அளவுக்குப் பலமான அடித்தளம் போட்டாகிவிட்டது."
--------

(இராச்சிய சபையில் - 03.02.1963)

"சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிடமுடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்ப படித்தவனாக இல்லாது இருக்கலாம். ஆனால் வளமான பொது அறிவு பெற்றிருக்கிறான். வெண்ணெய் எது சுண்ணாம்பு எது என்று வித்தியாசம் கண்டறிய அவனுக்குச் தெரியும்."
---------

(திருமுகம் - 14.01.1955)

"நாம் மிகமிகச் சாமான்யர்கள்!
நாம் சாதித்துள்ளவைகளோ, மிகப் பெரியவை!
நாம் சாதித்தாகவேண்டியவற்றுடன் ஒப்பிடும்போது, இவை கடுகளவு!
நாம் சாமான்யர்களானாலும் சாதிக்கவேண்டியவற்றை சாதித்தே தீருவோம்.
நாம் சாமான்யர்களானாலும் என்பது கூட தவறு.
நாம் சாமான்யர்கள் - எனவேதான் நாம் சாதிக்கவேண்டியதை சாதிக்கப்போகிறோம்.
நாம் சாமான்யர்கள் - எனவேதான் சாமான்யர்களின் பிரச்சினையைக் கவனிக்கிறோம்."
----------

(கடிதம் - 19.08.1956)

"தம்பி, திடுக்கிடவைப்பது நாவினால் சுடுவது பிரச்சாரத்தில் ஒருவகை. வாதிடுவது, வழிக்குகொண்டுவருவது, வாஞ்சனையைப் பெறுவது, பிரச்சார முறையில் மற்றொருவகை. தம்பி நமக்கு இந்த இரண்டாவது முறையே போதும்."
---------

(வீரர் வேண்டும் - 10.09.1944)

" அரசியல் மூலம் நாம் வேண்டுவது சில்லரைப் பதவிகளையல்ல, சிங்கார வாழ்வையல்ல, நமது இனத்தின் விடுதலையை நாம் விரும்புகிறோம். அதற்கே அரசியலை நாம் துணை கொள்ளுகிறோம். அதன் பொருட்டே அரசியலில் பணியாற்றுகிறோம்."
---------

(முதல் பந்தி - 20.08.1961)

"விடுதலை இயக்கம் தடையால், படையால் அழிவதில்லை. விடுதலை இயக்கம் அழிந்துவிட்டது, அழித்துவிட்டோம் என்று எண்ணி எதேச்சாதிகாரிகள் எக்காளமிடலாம். ஆனால் அது புதைகுழியைப் பிளந்துகொண்டு மீண்டும், மீண்டும் எழும். "

-------------

மொழி
நமக்குக் கிடைத்திருக்கின்ற தாய் மொழி பிற மொழிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கின்ற நேரத்தில் பிற மொழியாளர்களெல்லாம் பார்த்து, இவ்வளவு எழிலுள்ள மொழியா உங்களுடையது? இவ்வளவு ஏற்றம் படைத்த இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது? இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்? ஈராயிரம் ஆண்டு காலமாகவா இந்த மொழி சிதையாமல், சீர்குலையாமல் இருந்து வருகிறது? என்று ஆவலுடன் சிலரும் ஆயாசத்துடன் பலரும், பொறாமையோடு சிலரும், பொச்சரிப்பாலே பலரும், கேட்கத்தக்க நல்ல நிலையில் தமிழ் மொழிக்காகப் போராடுவதற்காகத் தமிழர் மன்றத்திலே தமிழன் பேசவில்லை - ஆனால் தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே, பிற மொழியை நுழைக்கின்ற பேதைமை, தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே பிற மொழியை ஆதிக்க மொழியாக்குகின்ற அக்கிரமம் இவைகளைக் கண்டித்து, அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழி என்ன என்று உங்களைக் கேட்க இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணா (இந்தி எதிர்ப்பு மாநாடு - திருவண்ணாமலை - 1957)

----------------

ஜனநாயகம்

பணத்தால் இயங்கவேண்டிய நிலையிலுள்ள அரசியல் இயக்கம் பணக்காரர்களின் இயக்கமாகிவிடும். அங்கே தியாகமும், தொண்டுணர்வும் பின்னுக்குத் தள்ளப்படும். சுழல் சொல்லர்களும், தன்னலங்களும் தலைமையேற்றுவிடுவர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்துகொண்டால் மட்டும் போதாது. தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளவேண்டும்.

அறிஞர் அண்ணா (பொழிவு - வானொலி - ஜனநாயகம் - 04.05.1962)

-----------------

உழைப்பு

உழைப்பு இந்த நாட்டில் மட்டுமே மிக மிக அலட்சியமாகக் கருதப்படுகிறது. உழைப்பு மட்டுமா? உயிரும் அப்படியே! ஏதோ மனிதன் பிறந்தான். மாயப் பிரபஞ்சத்தில் சின்னாள் இருப்பான் பிறகு மறு உலகம் சென்று மகேஸ்வரனோடு கலந்து, மலரும் மணம் போல் இருப்பான் எனக் கருதப்படும் நாடன்றோ இஃது. ஆகவேதான் மனித உழைப்பும், உழைப்புக்கேற்ற பயன் பெறாத முறையில் வகுக்கப்பட்டுள்ள உழவு முறைக்கு பலியாக்கப்பட்டு வருகிறது. எத்தனை சேதம்! எவ்வளவு அமோகமான உழைப்பு வீணாகிறது. எத்தனை ஆயிரக்கணக்கானவர்கள் எலும்பு நொறுங்க வேலை செய்து வாழ்க்கையை நடத்துகின்றனர். அவ்வாழ்க்கையிலும் எவரும் நடைப்பிணங்களாக அல்லவோ உள்ளனர். உழவு பயனற்றதா? அல்ல உழவு நம் நாட்டவருக்கு பசி போகப் பண்டந்தரவல்லதன்றோ! செல்வம் கொழித்து நம் நாட்டவர் சீருடன் வாழவும், தேயிலைத் தோட்டம் சென்று தேம்பியழவும் தமிழர் யாவரும் தமிழகத்திலேயே தன் மதிப்போடு வாழவும் முடியும் எப்போது? உழவு வெறும் உழைப்பாக மட்டுமன்றி, உழவுத் தொழிலாக விஞ்ஞான முறையை துணை கொண்டு நடத்தப்படின்.

- அறிஞர் அண்ணா
(கிராம சேவை - 10.12.1944)

--------------------

மாணவர்கள்

எத்தகைய கருத்துக்கும் நீங்கள் மனதில் இடம் தருவதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. மாணவ மணிகள் ஆகிய உங்களுக்கு  ஆராயும் அறிவு வேண்டும். நீங்கள் அனைவரும் புத்துலகச் சிற்பிகளாக வேண்டும். உங்களிடம் தீரமும், திறமும் இருந்தால் மட்டும் போதாது. இத்துடன் அறிவு, ஆராய்ச்சிகளு.ம் தேவை.  இதற்கான பண்பும் பயிற்சியும் மிக மிகத் தேவை. அறிவுத் தெளிவோடு ஆராய்ந்து இது சரி, இது தவறு என்று முடிவு கட்டும் மனப்பான்மை உங்களுக்கு வேண்டும். இதோடு திட்டவட்டமான கொள்கைகளும், பெருநோக்கும் உங்களுக்கு இருக்கவேண்டும்.

----------

பகுத்தறிவு
 
அகநானூறு, புறநானூறுகளில் எந்த தமிழ்நாட்டு மன்னனாவது போருக்குக் கிளம்பும்போது, படை கிளம்பும் முன் யாகம் செய்தான் என்றோ, பரமசிவத்திடம் பாசுபதம் பெற்றான் என்றோ, எங்கேயாவது பாடலுண்ட? அல்லது படைகிளம்பி எதிரிகளுடன் போரிடும பொழுதாவது வருணாஸ்திரம், அக்நியாஸ்திரம் ஆகிய அஸ்திரங்களில் எந்த அஸ்திரமாவது எதிரியை வீழ்த்தியபோது உதவியாக எங்காவது பாடல் இருப்பதாகச் சொல்லமுடியுமா?
 
- அறிஞர் அண்ணா
(பொழிவு - நிலையும், நினைப்பும் - 23.09.1947)

------------

இந்தியா

ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமென்றால் பதினான்கு தேசியமொழிகளும் ஆட்சிமொழிகளாகும் வரை மொழிப்பிரச்சினையில் ஒரு திருப்திகரமான நிரந்தரமான முடிவு ஏற்படப்போவதில்லை.
பன்மொழிகளை ஆட்சிமொழிகளாக்குவது இந்தியர்களை ஒன்றுபட்டவராகக் கலந்துகொள்ள நாம் தரும் விலை என்ற கொள்ளவேண்டும்.
இந்தியின் மூலம் ஒற்றுமையைக் குலைத்த இந்தியாவைத்தாம் பெறமுடியும்.
ஒற்றுமையான இந்தியர் என்று இருக்க வேண்டும் என்றால் ஒரு வட்டாரம் மற்றொரு வட்டாரத்தை அடக்குகிறது என்று எவரும் கருதும் வகையில் எத்தகைய நிலையிலும் இருக்கக் கூடாது.
 
- அறிஞர் அண்ணா

------------------

பொதுவாழ்வும் புகழுரையும்

பொது வாழ்வில் உள்ள இந்த வெளிச்சம் மயக்கமூட்டும் ஒளி,
இதனால் மகிழவே கூடாது என்பதல்ல
- அது முடியாத காரியம் -
இதனால் மயக்கமடைந்துவிடக்கூடாது.
அந்த மயக்கம் வராமலிருக்கத்தான்,
புகழுரை கேட்கும்போது,
தூற்றுபவர் உள்ளனர் என்பதை
மறவாமலிருக்கவேண்டும். அது மட்டும் போதாது.
புகழ்பவர்களில் பலர்
இதற்கு முன் நம்மைப் புகழ்ந்ததில்லை
என்பதையும்
இதற்கு முன் அவர்களே வேறு பலரைப்
புகழ்ந்திருக்கிறார்கள் என்பதையும்
மறக்கக் கூடாது.
அதுவும் போதாது,
புகழ்பவர்களே, பிறகு இகழ்வார்கள்
என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
அப்போதுதான் மன மயக்கம் ஏற்படாது.
 
அறிஞர் அண்ணா
(கட்டுரை - லேபிள் வேண்டாம் - 30.03.1947)

----------------------------

 

►  போட்டியும்,பொறாமையும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே.

►  பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்றும் முடிவு செய்த பிறகு மனிதனிடம் வாதிடுவது..செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.

►  எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும்.. நீங்கள் தாங்கித் தாங்கி வலுவை பெற்றுக்கொள்ளுங்கள்.

►  சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு; அந்த பிரகாசமான விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை.

►  அழகு ஒரு ஆபத்தான ஆயுதம்; அதனால் ஆளப்படுபவர்கள் ஆண்கள்; ஆள்பவர்கள் பெண்கள்.

►  அஞ்சா நெஞ்சம் படைத்த லட்சியவாதிகள் நாட்டிற்கு கிடைக்கக் கூடிய ஒப்பற்ற செல்வங்கள். ஏனெனில், பணம் வெறும் இரும்புப் பெட்டியில்தான் தூங்கும். ஆனால், இந்தச் செல்வங்களோ மக்களின் இதயப் பெட்டிகள் தோறும் நடமாடுவார்கள்.

►  விதியை நம்பி, மதியை பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிகக் கேடு.

►  புகழை நாம் தேடி சொல்லக்கூடாது; அதுதான் நம்மை தேடி வரவேண்டும்.

►  ஜாதிகள் இருந்தே ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள்.

►  பொது வாழ்வு புனிதமானது; உண்மையோடு விளங்கும் உயர் பண்பு தான் அதற்கு அடித்தளமானது.

►  சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்து விட முடியும் என்று நினைக்காதீர்கள். ஒரு சாமானியன் படிப்பறிவு இல்லாது இருக்கலாம் ஆனால் வளமான பொது அறிவு பெற்று இருக்கிறான். எது வெண்ணெய், எது சுண்ணாம்பு என்று வித்தியாசம் கண்டறிய அவனுக்கு தெரியும். 

►  சீமான்களில் சிலருக்குக் கூட சிற்சில சமயங்களில் ஏழையின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்கிற ஆசை வருவதுண்டு. ஆனால், அந்த ஆசை நிறைவேறுவதில்லை. காரணம், பிரபுக்களின் பட்டுத் துணிகளுக்கு ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் ஆற்றல் கிடையாது.

►  அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.

►  பகலோனைக் கண்டதும் மலர்ந்திடும் பங்கஜத்தைப் (தாமரைப்) பட்டத்தரசனும்கூட சட்டமிட்டுத் தடுத்துவிட முடியாது. இதுபோலத்தான் உண்மைக் காதல் என்னும் உத்தம உணர்ச்சியை ஓராயிரம் பேர் முயன்றாலும் ஒரு நாளும் அழித்துவிட முடியாது.

►  வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல், நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.

►  பல திறம்பட்ட கருத்துக்கள் உலவி ஒன்றோடொன்று போரிடும் தன்மை படைத்ததோர் போர்க்களம்தான் பேச்சு மேடை. அந்தக் களத்திலே பரிசும் உண்டு, பகையும் உண்டு.

►  கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் நமக்குத் தேவை. இவை சாதாரணமானவை தான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டுதான் ஒரு சமூகத்தை எடை போட முடியும்.

►  நமக்கென்ன என்று கூறும் சுயநலமிகளும், நம்மால் ஆகுமா என்று பேசும் தொடை நடுங்கிகளும், ஏன் வீண் வம்பு என்று சொல்லும் கோழைகளுமல்ல நாட்டுக்குத் தேவை. வீரர்கள் தேவை. உறுதிபடைத்த உள்ளங்கள் தேவை.

►  நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

►  பிறருக்கு தேவைப்படும் போது 'நல்லவர்களாக' தெரியும் நாம் தான், அவர்களது தேவைகள் முடிந்தவுடன் 'கெட்டவர்களாகி' விடுகின்றோம்.

►  எதையும் தாங்கும் இதயம் வேண்டும், மறப்போம்; மன்னிப்போம், கத்தியை தீட்டாதே; புத்தியைத் தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற பிரபலமான வரிகள் அண்ணாவினுடையதே..

by Swathi   on 07 Nov 2017  3 Comments
Tags: அறிஞர் அண்ணா   அறிஞர் அண்ணா பொன்மொழிகள்   அறிஞர் அண்ணா சிந்தனைகள்   arignar anna ponmozhigal   Arignar Anna Sinthanaigal        
 தொடர்புடையவை-Related Articles
அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்... அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்...
அரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்! - மஞ்சை.வசந்தன் அரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்! - மஞ்சை.வசந்தன்
பழிக்குப் பழி!  - அண்ணா பழிக்குப் பழி! - அண்ணா
கருத்துகள்
14-Sep-2020 20:42:19 Ln.P.PONMOZHI said : Report Abuse
ANNA IS A GREAT MAN, NOBODY IS NOT COME TO HIS PATH.
 
02-Sep-2019 18:01:14 Kâŕťhïk. said : Report Abuse
Aringar annavin Kavithaikal Tamil bitam ennum ithalil velivantha aandu Yethu
 
12-Jan-2019 05:52:19 மோகன்ராஜ் said : Report Abuse
இவர்கள் பொன் மொழிகள் என்று சொன்னது அனைத்தும் வீணாக போய் விட்டது! யாவர் வழி வந்தவர்கள் கொள்ளை கொள்ளை என்று கொள்கையாக கொண்ட மானம் ஈனம் இல்லாமல் ஜொலிக்கிறார்கள் .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.