அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அறிவு அற்றம் காக்கும் கருவி - அரசர்க்கு அறிவு என்பது இறுதி வாராமல் காக்கும் கருவியாம், செறுவார்க்கு அழிக்கலாகா உள் அரணும் - அதுவேயுமன்றிப் பகைவர்க்கும் அழிக்கலாகாத உள்ளரணும் ஆம். (காத்தல் - முன் அறிந்து பரிகரித்தல், உள்ளரண் - உள்ளாய அரண், உள்புக்கு அழிக்கலாகா அரண் என்றும் ஆம். இதனால், அறிவினது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்குக் குற்றமறைக்குங் கருவியாவது அறிவு: பகைவராலும் உட்புகுந்து அழிக்கலாகா அரணும் அதுதானே.
இது தனக்குள்ள குற்றத்தை மறைக்கு மென்றும் பிறரால் வருந்தீமையைக் காக்குமென்றும் அறிவினாலாம் பயன் கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
அறிவு அற்றம் காக்கும் கருவி - நிலவுலகில் வாழ்வார்க்கு, சிறப்பாக ஆள்வார்க்கு, அறிவானது அழிவு வராமற்காக்குங் கருவியாம்; செறுவார்க்கும் அழிக்கல் ஆகா உள் அரண்- அதுவுமன்றிப் பகைவராலும் அழிக்கமுடியாத உள்ளரணாம்.
காத்தல் - முன்னறிந்து தடுத்தல். உள்ளரண் அகக்கரணக் கூறாகிய அரண், உட்புகுந்தழிக்க முடியாத நுண்பொருள் வடிவினது.
கலைஞர் உரை:
பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.
Translation
True wisdom wards off woes, A circling fortress high;
Its inner strength man's eager foes Unshaken will defy.
Explanation
Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy.