ரூ.384 கோடியில் வைகை கரையில் 4 வழிச்சாலை – மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விறுவிறுப்பாக நடக்கும் பணிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறையும், மாநகராட்சியும் இணைந்து வைகை ஆற்றின் இருபுறமும் ரூ. 384 கோடியில் 50 அடி அகலத்துக்கு பிரமாண்ட நான்கு வழிச் சாலையை அமைத்த வருகின்றன. இந்தச் சாலைகள் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மாநராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், இந்தச் சாலையை அமைக்கிறது. இந்த நான்கு வழிச்சாலையில் பூங்காக்கள், தடுப்புச் சுவர் மற்றும் தடுப்பணைகள் உள்பட ரூ. 84 கோடிக்கு பணிகள் நடக்கின்றன. மொத்தம் ரூ. 384 கோடியில் இந்த சாலைகள் அமைகின்றன. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியது: 4 பிரிவாக சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதில் தெப்பக்குளம் - விரகனூர் பிரிவு சாலைகள் முடியும் தருவாயில் உள்ளன. மற்ற 2 பிரிவு சாலை பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இன்னம் 3 மாதத்தில் பணிகள் நிறைவடையும் என்றார். மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த திட்டத்தில் மாநகராட்சி 2 கி்மீ. தொலைவுக்கு மேற்கொள்ளும் சாலைக்கு தற்போது தான் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சமதளப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இன்னும் 15 நாட்களில் சாலைப் பணிகள் தொடங்கிவிடும். 3 மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த சாலை நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். நகர் பகுதியில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் எளிதாக கடந்து செல்ல இந்த சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
|