மதுரையில் கலைஞர் நூலகம் ,சென்னையில் பன்நோக்கு மருத்துவமனை கோவில்பட்டியில் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு மணிமண்டபம்
சென்னைகிண்டியில் அமைந்துள்ள ஆராய்ச்சி மைய வளாகத்தில் பொதுப் பணித்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகம், சென்னையில் அமைய உள்ள பன்னோக்கு மருத்துவமனை, கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவாக கோவில்பட்டியில் கட்டப்படவிருக்கும் மணிமண்டபம் ஆகிய கட்டிடங்களுக்கான மதிப்பீடுகள் மற்றும் வரைபடங்களை அதிகாரிகள் விரைவில் சமர்பிக்க வேண்டும் என்று கூறினார். பொதுப்பணித் துறையால் தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பிரிவுக்கான ஆக்சிஜன் குழாய் இணைப்பு பணிகள், மின்விளக்கு பொருத்தும் பணிகள், நடைபெற்று இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், 11 இடங்களில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் புதிய மருத்துவமனைகளின் கட்டிடப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் ரூபாய் 250 கோடி மதிப்பில் கட்டப்படவிருக்கும் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் ரூபாய் 70 கோடியில் கட்டப்படவிருக்கும் கலைஞர் நினைவு நூலகம், மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்கள் நினைவாக அமையவிருக்கும் மணிமண்டபம் ஆகியவற்றின் மதிப்பீடுகள் மற்றும் வரைபடம் போன்றவை விரைவாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார். சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் ஹிலாரி கிளின்டனால் பாராட்டப்பட்டது.அதேபோல் மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகமும் பாராட்டப் பெறும் வகையில் அமைய வேண்டும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
|